

பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த எருதுகூடஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முனியப்பன்(வயது75) இவருக்கு, 3 மகள்களும், மாது(35) என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இவரது மனைவி முனியம்மாள்ள், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் முனியப்பன்ஸ தனது மகள் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் முனியப்பனுக்கு சொந்தமான, 5 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தை தனது, மகள்களுக்கு சொத்தை பிரித்து கொடுக்க முனியப்பன் முடிவு செய்தார். இதற்கு அவரது மகன் மாது கடும் எதிர்ப்பு தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
ஆனால் மகனின் எதிர்ப்பை மீறி முனியப்பன், தனது ஒரு ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துள்ளார். இது மாதுவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து நேற்று மதியம் 2 மணியளவில் மாது , முனியப்பன் வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டில் இருந்த தந்தை முனியப்பனை சரமாரியாக வெட்டினார். இதில் தலை, கை, கால்களில் பலத்த வெட்டப்பட்ட முனியப்பன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் மாரண்டஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் முனியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக் காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சொத்து தகராறில் பெற்ற தந்தையை வெட்டிக்கொன்ற மாதுவை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே இந்த கொலை குறித்து முனியப்பனின் மகள்கள் மல்லிகா(30), சந்தியம்மாள் (28) மற்றும் மாதுவின் மனைவி ஜோதி ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்து பிரச்சினையில் தந்தையை மகனே வெட்டிக்கொன்ற சம்பவம் பாலக்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.