search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானி கூடுதுறையில் பக்தர்கள் தர்ப்பணம் செய்து புனித நீராடினர்
    X

    பவானி கூடுதுறையில் பக்தர்கள் தர்ப்பணம் செய்து புனித நீராடினர்

    • தை அமாவாசையை முன்னிட்டு இன்று அதி காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களும் பொதுமக்களும் ஆற்றில் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர்.
    • கடந்த 2 வருடங்களாக கொராணா நோய்த்தொற்றால் பவானி கூடுதுறை ஆற்றில் பரிகாரம் செய்து புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது.

    குமாரபாளையம்:

    காவிரி, பவானி மற்றும் அமுதநதி என மூன்று நதிகளும் சங்கமமாகும் பவானி கூடுதுறை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்றின் மறுகரையில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தென்னகத்தின் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.

    தை அமாவாசையை முன்னிட்டு இன்று அதி காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களும் பொதுமக்களும் ஆற்றில் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர். இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் பரிகார பூஜை செய்து முக்கூடல் ஆற்றில் புனித நீராடினர். அதன் பிறகு கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மன், ஆதிகேசவ பெருமாள், லட்சுமி நரசிம்மர், வள்ளி தேவசமேத ஆறுமுகக்கடவுள் என அனைத்து மூலவர் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

    முக்கூடல் ஆற்றில் ஆன்மீக பக்தர்கள் புனித

    நீராடவும் பின்னர் உடை களை மாற்றிக்கொள்ளவும் கோவில் நிர்வாகத்தினர் தனித்தனி இடங்களை ஏற்பாடு செய்திருந்தனர். ஆற்றில் நீராடும் பக்தர்கள் பாதுகாப்புக்காக பரிசல்களுடன் பரிசல் வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

    அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பவானி போலீஸ் டி.எஸ்.பி சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    கடந்த 2 வருடங்களாக கொராணா நோய்த்தொற்றால் பவானி கூடுதுறை ஆற்றில் பரிகாரம் செய்து புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தடைகள் நீக்கப்பட்டதால் ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், திருப்பூர், கோவை மாவட்டம் உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த வர்களும் பெருமளவில் கலந்து கொண்டு புனித நீராடினர்.

    Next Story
    ×