search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் ரூ.5 கோடியில் மேம்பாட்டு பணி-கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்
    X

    கோரம்பள்ளம் ஆற்றில் வெள்ள பாதுகாப்பு பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

    தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் ரூ.5 கோடியில் மேம்பாட்டு பணி-கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்

    • கோரம்பள்ளம் குளம் மறுகால் 24 கண் மதகு வழியாக உப்பாத்து ஓடை என்னும் பெயரில் கடலில் கலக்கிறது.
    • திடீர் நீர்வரத்து காரணமாக உப்பாற்று ஓடை கரைகளில் உடைப்புகள் ஏற்பட்டன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே மலைப்பட்டி என்னும் கிராமத்தில் சிறு, சிறு காட்டோடைகள் இணைந்து ஆறாக உருவெடுத்து ஓட்டப்பிடாரம், தட்டப்பாறை வழியாக தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே சுமார் 32 கிலோ மீட்டர் தூரம் சென்று கோரம்பள்ளம் குளத்தை வந்தடைகிறது.

    பின்னர் கோரம்பள்ளம் குளம் மறுகால் 24 கண் மதகு வழியாக உப்பாத்து ஓடை என்னும் பெயரில் சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் சென்று தூத்துக்குடி துறைமுகம் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு உப்பாற்று ஓடை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் காரணமாக கோரம்பள்ளம் குளம் அதிகப்பட்ச நீர்மட்டத்தை எட்டியது.

    இதனால் உபரிநீர் போக்கியில் உள்ள 24 மதகுகள் மூலம் 30 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. திடீர் நீர்வரத்து காரணமாக உப்பாற்று ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைகளில் உடைப்புகள் ஏற்பட்டன. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து உப்பாற்று ஓடையை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ரூ.5 கோடிஇந்த நிலையில் உப்பாற்று ஓடையை ரூ.5 கோடி செலவில் சீரமைத்து மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    இந்த பணிகள் தொடக்க நிகழ்ச்சி வீரநாயக்கன் தட்டு பகுதியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் சிறுபாலங்கள் அமைத்தல், உள்வாங்கிகள் கட்டுதல், புனரமைத்தல், பிற வெள்ள பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறும்போது, கடந்த காலங்களில் உப்பாற்று ஓடையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மாவட்ட கலெக்டர் அலுவலக பகுதி, மறவன்மடம், அந்தோணியார்புரம், சுப்பிரமணியபுரம், பெரியநாயகிபுரம், திரு.வி.க.நகர், எஸ்.எஸ்.நகர், காலாங்கரை, அத்திமரப்பட்டி, வீரநாயக்கன்தட்டு, முத்துநகர், முத்தையாபுரம், கோவில்பிள்ளைநகர் ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    எனவே இந்த பகுதிகளில் வருங்காலத்தில் காட்டாற்று வெள்ளப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சிறப்பு திட்டமாக கோரம்பள்ளம் ஆற்றில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார். நிகழ்ச்சியில் கோரம்பள்ளம் நீர் வடிநில கோட்ட செயற்பொறியாளர் அ.வசந்தி, உதவி செயற்பொறியாளர்கள் சுபாஷ், ரத்தினகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×