

ஆத்தூர்:
சேலம் மாவட்டம் தலைவாசல் தினசரி மார்க்கெட்டில் வாழைப்பழம் செயற்கை முறையில் பழுக்க வைப்பதாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு நடத்தினார். இதில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 195 கிலோ வாழைப்பழம் பறிமுதல் செய்யப்பட்டது.
அத்துடன் செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுத்தப்பட்ட ரசாயனம் 150 மி.லி. பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாழைப்பழங்கள் மற்றும் ரசாயனங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன, ஆய்வு செய்யப்பட்ட 7 பழக்கடைகளில் 2 கடைகளில் மட்டுமே உணவு பாதுகாப்பு உரிமம் பார்வையில் வைக்கப்பட்டிருந்தது. மற்ற கடைகளில் உரிமம் பார்வையில் வைக்கப்படவில்லை. ரசாயனம் கலந்து பழங்கள் பழுக்க வைத்த 3 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த கடைகள் யாவும் உணவு பாதுகாப்பு துறையின் தொடர் கண்காணிப்பில் இருக்கும் என்று உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் தெரிவித்தார்.