search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரந்தை கருணாசாமி கோவிலில் ஏழூர் பல்லக்கு புறப்பாடு
    X

    கருணாசாமி கோவிலில் ஏழூர் பல்லக்கு புறப்பாடு விழா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள் பல்லக்கில் எழுந்தருளினர்.

    கரந்தை கருணாசாமி கோவிலில் ஏழூர் பல்லக்கு புறப்பாடு

    • தினமும் சுவாமி- அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.
    • நாளை (5-ந் தேதி) பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த கரந்தையில் பெரியநாயகி அம்பாள் உடனுறை கருணாசாமி கோவில் என்கிற வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களில் ஒன்றாகும். தேவார பாடல் பெற்ற வைப்பு தலமாகவும் விளங்கி வருகிறது.

    வைகாசி விசாக பெருவிழா

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் வைகாசி விசாக பெருவிழா மற்றும் ஏழூர் பல்லக்கு விழா கடந்த மாதம் (மே) 20-ந் தேதி அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி- அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.

    34 ஆண்டுகளுக்கு பிறகு..

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் பல்லக்கு, சுவாமி- அம்பாள் கண்ணாடி பல்லக்கிலும், வெட்டிவேர் பல்லாக்கிலும் உலா வரும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த விழா கடந்த 1988-ம் ஆண்டு வரை நடைபெற்று வந்தது. காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் இவ்விழா நடைபெறவில்லை. தற்போது 34 ஆண்டுகளுக்கு பிறகு இன்று இந்த பல்லக்கு விழா நடைபெற்றது.

    பல்லக்கில் எழுந்தருளிய சுவாமி- அம்பாள்

    முன்னதாக அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் சோமாஸ்கந்தர்,

    பெரியநாயகி அம்மன், கந்தர் மற்றும் தனி அம்மன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளினர். இதேபோல், வெட்டிவேர் பல்லக்கில் வசிஷ்டர்,

    அருந்ததி அம்மன் சுவாமிகள் எழுந்தருளினர். இதனையடுத்து சுவாமிகளுக்கு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி

    பின்னர், சிவ வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் கண்ணாடி பல்லக்கு மற்றும் வெட்டிவேர் பல்லக்கை தோளில் சுமந்தபடி கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர்.

    பின்னர், பல்லக்குகள் ஏழூர் சப்தஸ்தான தலங்களான வசிஷ்டேஸ்வரர் கோவில் (கரந்தை),

    தஞ்சபுரீஸ்வரர் கோவில் (வெண்ணாற்றங்கரை), வசிஷ்டேஸ்வரர் கோவில் (திருதென்குடி திட்டை), சொக்கநாதர் கோவில் (கூடலூர் திருக்கூடலம்பதி), ராஜராஜேஸ்வரர் கோவில் (கடகடப்பை), கைலாசநாதர் கோவில் (திருப்புன்னைநல்லூர்), பூமாலை வைத்தியநாதர் கோவில் (கீழவாசல்) ஆகிய ஏழு ஊர்களுக்கும் பல்லக்கு புறப்பாடு நடைபெற்றது. பல்லக்கு கோவிலை வந்தடைந்ததும் நாளை (5-ந் தேதி) பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இதில் பேரூர் கட்டளை தம்பிரான் சிவப்பிரகாச அடிகளார், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் மூர்த்தானந்தர் மற்றும் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்ட விழா குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×