தேவர்குளம் அருகே தடுப்பணை இடிக்கப்பட்டதால் விவசாயம் பாதிப்பு

சங்கரன்கோவில் அருகே மேல இலந்தைகுளம் பெரியகுளம் ஓடையில் சுமார் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டது. அந்த தடுப்பணையை மர்ம நபர்கள் சிலர் சமீபத்தில் உடைத்துவிட்டனர்.
இடிக்கப்பட்ட தடுப்பணை.
இடிக்கப்பட்ட தடுப்பணை.
Published on

சங்கரன்கோவில்:

கடந்த 2019-2020-ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் திட்டத்தின் கீழ் சங்கரன்கோவில் அருகே மேல இலந்தைகுளம் பெரியகுளம் ஓடையில் சுமார் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டது.

இதன் மூலம் அந்த பகுதியை சேர்ந்த சுமார் 15 கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழித்து காணப்பட்டது. ஆனால் அந்த தடுப்பணையை மர்ம நபர்கள் சிலர் சமீபத்தில் உடைத்துவிட்டனர். மேலும் அந்த இடத்தை பாதையாக மாற்றிவிட்டனர். இதனால் அந்த பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும் நிலை இருப்பதாக விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர். அந்த பகுதியில் தடுப்பணையை தாண்டி உள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதற்காக யாரேனும் அதனை இடித்தார்களா என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக மேல இலந்தைகுளத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட கலெக்டர், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, வட்டார வளர்ச்சி அலுவலருக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.

இந்த மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com