search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதல் பிரச்சினையில் கொலை மிரட்டல்- நெல்லை தப்பி வந்த ஐதராபாத் இளம்பெண் சொந்த ஊர் அனுப்பி வைக்குமாறு போலீசாரிடம் கெஞ்சல்
    X

    காதல் பிரச்சினையில் கொலை மிரட்டல்- நெல்லை தப்பி வந்த ஐதராபாத் இளம்பெண் சொந்த ஊர் அனுப்பி வைக்குமாறு போலீசாரிடம் கெஞ்சல்

    • எனக்கு தமிழ் தெரியாததால் இங்குள்ளவர்களிடம் எனது நிலையை விளக்கி கூற முடியவில்லை.
    • திடீரென என்னை திருமணம் செய்ய மறுத்து அந்த வாலிபர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வண்ணார்பேட்டை பகுதியில் சாலையில் சுற்றி திரிந்து வந்தார்.

    தமிழ் தெரியாத அந்த இளம்பெண் இந்தி மற்றும் தெலுங்கில் பேசினார். அவரது கையில் கத்தியால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தது.

    இதனை பார்த்த அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் அந்த பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

    எனது பெயர் அகிலா, சொந்த ஊர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மாதாப்பூர் ஆகும். நானும் எங்கள் பகுதியில் ஒரு வாலிபரும் காதலித்து வந்தோம்.

    திடீரென என்னை திருமணம் செய்ய மறுத்து அந்த வாலிபர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் வருகிற 15-ந் தேதி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல உள்ளார்.

    இதனை தடுக்க வலியுறுத்தி ஐதராபாத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் நான் புகார் செய்தேன். இதனை அறிந்து கொண்ட வாலிபரின் குடும்பத்தினர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அச்சத்தில் இருந்த நான் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தேன். இதற்காக ஐதராபாத்தில் இருந்து ஒரு ரெயிலில் ஏறி பயணம் செய்தேன். பின்னர் நெல்லை வந்து சேர்ந்தேன்.

    எனக்கு தமிழ் தெரியாததால் இங்குள்ளவர்களிடம் எனது நிலையை விளக்கி கூற முடியவில்லை. வருகிற 15-ந் தேதி திட்டமிட்டபடி என்னை காதலித்த வாலிபர் ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா செல்ல உள்ளார். அதனை தடுத்து நிறுத்த வேண்டும். தற்போது என்னிடம் சொந்த ஊர் செல்வதற்கான போதுமான பணம் கையிருப்பில் இல்லை.

    அவரை தடுத்து நிறுத்தவில்லை என்றால் எனது வாழ்க்கை கேள்வி குறியாக மாறிவிடும். எனவே எனக்கு பண உதவி வழங்கி என்னை ஐதராபாத் செல்ல உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் காதல் பிரச்சினை தொடர்பாக அந்த இளம்பெண் ஐதராபாத்தில் வைத்து தனது கைகளை கத்தியால் தானே வெட்டிக்கொண்டதும் தெரிய வந்தது.

    தொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×