

கோவை:
பொள்ளாச்சி ராஜா மில் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (34). இவரது மனைவி அனிதாதேவி (32). இவர்கள் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
அனிதாதேவி அவரது குடும்பத்தினரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். அதனால் அவரது பெற்றோர் அவரை ஏற்று கொள்ளவில்லை.
சம்பவத்தன்று அனிதா-தேவி வடுகப்பாளையம் பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது தாயார் கீதா ராணி (51) மற்றும் தம்பி கோகுல்குமார் (27) ஆகியோர் இருந்தனர்.அவர்களிடம் அனிதாதேவி தனது பாட்டியின் நகைகளை தருமாறு கேட்டார். அதற்கு அவர்கள் தரமறுத்து அனிதாதேவியை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்து செல்லுமாறு கூறினர்.
தாயும், தம்பியும் திட்டியதால் மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்து தாயின் வீட்டின் முன்பு தான் வைத்திருந்த மாத்திரையை அளவுக்கு அதிகமாக தின்று மயங்கி விழுந்தார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.