

வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இலவம் பஞ்சு சாகுபடி நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு இலவம் பஞ்சு கிலோ 100 ரூபாய் வரை விற்பனை ஆனது. இருப்பினும் விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லாத காரணத்தால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடமலை மயிலை ஒன்றிய கிராமங்களில் அதிக அளவில் மழைப்பொழிவு காணப்பட்டது. மேலும் மூல வைகை ஆற்றில் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.
இதனால் தற்போது மரங்களில் இலவம் காய்களின் விளைச்சல் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் தற்போது மழை அளவு குறைந்துள்ளதால் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது இலவம் காய்களின் விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல விலையும் அதிகரித்தால் இந்த ஆண்டு அதிக அளவில் லாபம் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.