முன்பதிவில்லா விரைவு ரெயில்கள் பயணிகள் ரெயில்களாக மாற்றம்

ரெயில்களின் எண்களும் 7-ல் ஆரம்பிக்கும் வகையில் மாற்றப்பட்டன. பழைய எண்களை அறிவிக்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
முன்பதிவில்லா விரைவு ரெயில்கள் பயணிகள் ரெயில்களாக மாற்றம்
Published on

சென்னை:

பெருநகரங்களையும், சிறு கிராமங்களையும் இணைக்கும் முக்கிய ரெயில் போக்குவரத்தாக பயணிகள் ரெயில் விளங்குகிறது. கொரோனா பரவலுக்கு முன்பு தெற்கு ரெயில்வே சார்பில் 3,081 கி.மீ. தொலைவுக்கு 487 பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டன.

கொரோனா கட்டுப்பாட்டின்போது நிறுத்தப்பட்ட இந்த ரெயில் சேவை பின்னர் முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் எனும் பெயரில் இயக்கப்பட்டன.

இதனால் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10-லிருந்து ரூ.30 ஆக உயர்ந்ததால் தினசரி பயணிக்கும் ஏழை நடுத்தர மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் அனைத்து மெமு, டெமு, பயணிகள் சிறப்பு ரெயில்கள் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும் எனவும், கொரோனா கட்டுப்பாட்டுக்கு முன்பு வசூலித்த கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த முன்பதிவில்லா சிறப்பு ரெயில்களுக்கான எண்கள் வழக்கமான பயணிகள் ரெயில்களுக்கான எண்களாக மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவில் இருந்து அனைத்து கோட்ட பொதுமேலாளருக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவலுக்கு பின்பு அனைத்து பயணிகள் ரெயிலும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்களாக மாற்றி இயக்கப்பட்டன.

இந்த ரெயில்களின் எண்களும் 7-ல் ஆரம்பிக்கும் வகையில் மாற்றப்பட்டன. இந்த நிலையில் தெற்கு ரெயில்வேயில் இயங்கும் அனைத்து முன்பதிவில்லா ரெயில்களின் எண்களையும் மாற்றி மீண்டும் பழைய எண்களை அறிவிக்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தெற்கு ரெயில்வேயில் இயங்கும் 288 பயணிகள் ரெயில்கள் மற்றும் 8 மலைப்பாதை ரெயில்களின் எண்கள் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி பழைய எண்களை கொண்டு இயக்கப்படும்.

உதாரணமாக திருப்பதி-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில் 06728 எனும் எண்ணிலும், மதுரை-செங்கோட்டை பயணிகள் ரெயில் 06504 எனும் எண்ணுக்கு பதிலாக 56719 எனும் எண்ணிலும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com