

மேலசொக்காநாதபுரம்:
போடி அருகில் உள்ள குரங்கணி மலைப்பகுதிகளல பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளில கடந்த சில நாட்களாக பரவலாக பல இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
இதனால் அரியவகை மூலிகைகள், செடிகள், மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளன. மேலும் வன விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் காட்டுத்தீயால் பல்வேறு தரப்பினரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இன்று குரங்கணி மலைப்பகுதி முத்துக்கோம்பை முதல் கொங்கிக்கரடு வரை மீண்டும் காட்டுத்தீ பற்றியது.
காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர வனத்துறையினர் போராடி வருகின்றனர். சமூக விரோதிகள் தீ வைக்கின்றனரா? அல்லது கோடை வெயிலால் தீ பற்றியதா? என விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போதிய உபகரணங்கள் இல்லாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
எனவே மேற்கு தொடர்ச்சி மலையின் வளங்கள் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.