search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக இருந்ததாக கூறி நோயாளியின் குடும்பத்திற்கு ரூ.2¾ லட்சம் இழப்பீடு-குன்னூர் தனியார் மருத்துவமனைக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவு
    X

    சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக இருந்ததாக கூறி நோயாளியின் குடும்பத்திற்கு ரூ.2¾ லட்சம் இழப்பீடு-குன்னூர் தனியார் மருத்துவமனைக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவு

    • ஆனால் 24-10-2020 அன்று நோயாளி நினைவிழந்து விட்டார்
    • இதை தொடர்ந்து சபாபதி ஊட்டி நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்

    குன்னூர்

    நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக இருந்ததாக கூறி, அவரின் குடும்பத்திற்கு ரூ.2¾ லட்சம் இழப்பீடு வழங்க கோரி குன்னூர் தனியார் மருத்துவமனைக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த உபதலை காந்திநகரை சேர்ந்தவர் சபாபதி. மத்திய அரசு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி விமலா. கடந்த 19-10-2020 அன்று உடல் நலக்குறைவு காரணமாக குன்னூரில் உள்ள நன்கம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவர் குணமடைந்து வருகிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறி வந்து உள்ளது. ஆனால் 24-10-2020 அன்று நோயாளி நினைவிழந்து விட்டார். அவரை உடனடியாக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று நன்கம் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறி உள்ளனர். இந்தநிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விமலா 2-11-2020 அன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிருப்தி அடைந்த சபாபதி இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டார். அதற்கு அவர்கள் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதை தொடர்ந்து சபாபதி ஊட்டி நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார. அதில் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் யாரும் இல்லாமல் இது போன்ற தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அனுமதித்து, நோய் மிக தீவிரம் அடைந்த நிலையில் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வைப்பது, பணம் பறிப்பதற்காக செய்யப்படும் மோசடி ஆகும். முதலுதவி மட்டும் வழங்கி விட்டு கோவை மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தால் நோயாளி உயிர் பிழைத்திருக்கலாம். மருத்துவமனையின் அலட்சியமே எனது மனைவியின் மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் பி.ஆல்துரை வழக்கில் வாதாடினார். மருத்துவமனை சார்பில், நோயாளியின் தினசரி மருத்துவ குறிப்பு, தீவிர சிகிச்சை பிரிவில் செய்யப்பட்ட பதிவுகள் என எந்த ஒரு ஆவணமும் சமர்ப்பிக்கப்பட்டு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க இயலவில்லை. எனவே, சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக இருந்து இருக்கிறது என்று கூறி, நோயாளியிடம் வசூலித்த ரூ.1 லட்சத்து 82 ஆயிரம், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.1 லட்சம் மற்றும் வழக்கு செலவாக ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்தை 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்று ஆணையத்தின் தலைவர் சித்ரா உத்தரவிட்டு உள்ளார்.

    Next Story
    ×