search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோலம்பாளையத்தில் 2 ஆண்டுகள் ஆகியும் நிறைவடையாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி
    X

    தோலம்பாளையத்தில் 2 ஆண்டுகள் ஆகியும் நிறைவடையாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி

    • கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் பணிகள் தொடங்கப்பட்டது.
    • அப்பகுதி மக்கள் குடி தண்ணீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சியில், கோபனாரி, ஆலங்கண்டி, ஆலங்கண்டி புதூர், சீங்குழி, பட்டி சாலை, செங்குட்டை, மேல்பாவி, குழியூர், ஊக்கையனூர், ஊக்கப்பதி,மொட்டியூர், நீலாம்பதி உள்ளிட்ட பல்வேறு மலைவாழ் கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அடர் வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த மலை கிராமங்களில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை போக்கும் வகையில் கடந்த 2021-2022 ஆம் ஆண்டு 15-வது நிதி குழு மானியத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆலங்கண்டி பகுதியில் அமைக்க திட்டமிட்டது. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டது.

    இந்த நிலையில் மேல் நிலை நீர்தேக்க தொட்டி தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் இப்பணியை பாதியில் நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாகவே அப்பகுதி மக்கள் குடி தண்ணீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கோபனாரி பகுதியைச்சேர்ந்த மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க ரூ.10 லட்சம் மதிப்பில் பூமி பூஜை போடப்பட்டு அப்பணிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதனால் தாங்கள் குடிநீருக்காக வனப்பகுதிக்குள் செல்லும் போது மனித-வனவிலங்குகள் உயிரின மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    இதனால் அரசு உரிய நடவடிக்கை எடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.தோலம்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயா செந்தில் கூறும் போது, பணிகளை எடுத்த ஒப்பந்ததாரரிடம் இருந்து சப் காண்ட்ராக்ட் எடுத்த நபர் பணத்தைப் பெற்றுக் கொண்டு பணிகளை முடிக்காமல் இருந்தார். இதனால் தற்போது வேறு ஒப்பந்ததார் மூலம் இப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. தற்போது ஒப்பந்தம் எடுத்துள்ள நபர் தோலம்பாளையம் புதூர் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.அப்பணிகளை முடித்து அடுத்த வாரத்திற்குள் ஆலங்கண்டி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணிகள் தொடரும் என்றார்.

    Next Story
    ×