மசினகுடி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் வனத்துறையினர் மீது புகார்- பொதுமக்கள் ஆவேசம்

வனப்பகுதியில் ஆண்டாண்டு காலமாக வசிக்கும் ஆதிவாசிகள்-பொதுமக்கள் இடையே பிரித்தாளும் வேலையை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.இனிமேல் வனத்துறை உயரதிகாரிகள் வராமல் கிராமசபை நடத்தினால் கருப்பு கொடி போராட்டம் நடத்துவோம்.
மசினகுடி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் வனத்துறையினர் மீது புகார்- பொதுமக்கள் ஆவேசம்
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட மாவநல்லா பகுதியில் கிராம சபை கூட்டம், ஊராட்சி தலைவர் மாதேவி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் கிரண் வரவேற்றார்.

துணைத்தலைவர் ராஜேஷ், மசினகுடி ரேஞ்சர் பாலாஜி, சீகூர் ரேஞ்சர் தயானந்தன், வனவர்கள் பரமசிவம், ஸ்ரீராம் மற்றும் போலீசார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய அரசுக்கு வலியுறுத்துவது, வாழைதோட்டம் பகுதி மக்களின் ஜீவதார பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் பொது மக்கள் பேசும்போது வனத்துறைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இதுகுறித்து அவர்கள் பேசியதாவது:-

100 நாள் வேலை திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு 10 நாட்கள் மட்டுமே வேலைகிடைக்கிறது. மேலும் வருவாய்துறைக்கு சொந்தமான இடங்களை வனத்துறைக்கு வழங்க கூடாது.

வனத்துறை அதிகாரிகள் புதிய வீடுகள் கட்டவும், உள்ளூர் மக்களின் வாகன போக்குவரத்துக்கும் தடை விதித்து வருகின்றனர். வளர்ச்சி பணிகளுக்கு கூட முட்டுக்கட்டை போடப்படுகிறது.

வனப்பகுதியில் ஆண்டாண்டு காலமாக வசிக்கும் ஆதிவாசிகள்-பொதுமக்கள் இடையே பிரித்தாளும் வேலையை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.

மேலும் வனத்துறை உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் யாருமே கிராம சபை கூட்டங்களுக்கு வருவ தில்லை. அவர்கள் வந்தால்தானே எங்கள் வாழ்க்கை பிரச்சனைக்கு வழி சொல்லமுடியம். இனிமேல் வனத்துறை உயரதிகாரிகள் வராமல் கிராமசபை நடத்தினால் கருப்பு கொடி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com