search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை டவுனில் ரியல் எஸ்டேட் அதிபரை வெட்டிய வழக்கில் 7 பேர் மீது வழக்குப்பதிவு
    X

    நெல்லை டவுனில் ரியல் எஸ்டேட் அதிபரை வெட்டிய வழக்கில் 7 பேர் மீது வழக்குப்பதிவு

    • 3 பேர் கும்பல் சக்தியின் 2 கைகளையும் சரமாரி வெட்டிவிட்டு தப்பிச்சென்றது.
    • இடப்பிரச்சினை முற்றியதில் மடத்தானின் மகன்கள் முருகனின் கையை வெட்டினர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் வயல் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சக்தி(வயது 32). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் நேற்று அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தனது 2 குழந்தைகளையும் விட்டுவிட்டு மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    சரமாரி வெட்டு

    அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் சக்தியின் மொபட்டில் மோதவிட்டு அவரை கீழே தள்ளி அவரது 2 கைகளையும் சரமாரி வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இதில் படுகாயம் அடைந்த சக்திக்கு சந்திப்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அறிந்த டவுன் போலீசார் அங்கு விரைந்த சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் 3 பேர் இருந்ததும், மெயின் சாலையில் நின்று 2 பேர் நோட்டமிட்டதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த காமிராக்களில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    சக்தி கட்டியுள்ள வீட்டின் இடம் மீது அவரது தூரத்து உறவினரான மடத்தான் என்பவர் தனக்கும் உரிமை உள்ளதாக கூறி அடிக்கடி சக்தியின் தந்தை முருகனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு இடப்பிரச்சினை முற்றியதில் மடத்தானின் மகன்கள் சக்தியின் தந்தை முருகனின் கையை வெட்டினர்.

    இந்நிலையில் அந்த பிரச்சினை அவர்களுக்குள் தொடர்ந்து புகைந்து வரும் நிலையில் நேற்று மடத்தான் மற்றும் அவரது மனைவி பாப்பா ஆகியோரின் தூண்டுதலின்பேரில் அவரது மகன்கள் சிவா, முத்துப்பாண்டி மற்றும் 3 பேர் இந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் சிவா, முத்துப்பாண்டி ஆகியோரின் பெயர்கள் ரவுடிகள் பட்டியலில் இருப்பதாகவும், அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    Next Story
    ×