தொழிலாளியை வெட்டி கொன்ற சகோதரர்கள் கைது

DGL0405052024: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சின்ன ஓவுலாபுரம் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரவேல்முருகன் (வயது 49). கூலித் தொழிலாளி. இவருக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று கூடலூருக்கு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்ற சந்திரவேல்
தொழிலாளியை வெட்டி கொன்ற சகோதரர்கள் கைது
Published on

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சின்ன ஓவுலாபுரம் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரவேல்முருகன் (வயது 49). கூலித் தொழிலாளி. இவருக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சம்பவத்தன்று கூடலூருக்கு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்ற சந்திரவேல் முருகன் இரவு வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் எரசக்கநாயக்கனூர் பகுதியில் உள்ள தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணற்றில் சந்திரவேல் முருகன் மற்றும் அவரது பைக் கிடந்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உடலில் வெட்டுக்காயங்கள் இருந்ததால் கொலை செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். மேலும் சந்திரவேல் முருகனுக்கு யாருடனும் முன் பகையா என விசாரணை மேற்கொண்டனர். இதில் அவரது உறவினர் கவிசீலன் மகன்கள் நிஷாந்த் (வயது 26), நிவிஸ் (24) ஆகியோர் முன் விரோதம் காரணமாக சந்திரவேல்முருகனை வெட்டிக் கொன்று கிணற்றில் வீசியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 2 பேரையும் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், சந்திரவேல் முருகன் குடும்பத்துக்கும் கவிசீலன் குடும்பத்துக்கும் முன் பகை இருந்துள்ளது. கடந்த வருடம் வருசநாடு தருமராஜபுரம் பகுதியில் நடைபெற்ற பஞ்சாயத்தில் சந்திரவேல்முருகனின் மருமகன் நல்லசாமி கொலை செய்யப்பட்டார். இது குறித்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டது. இதில் சந்திரவேல்முருகன் கவிசீலனின் மனைவி பேச்சியம்மாளை தாக்கியுள்ளார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை மனதில் வைத்துக் கொண்டு மகன்கள் நிஷாந்த், நிவிஸ் ஆகியோர் சந்திரவேல்முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர் உடல் மற்றும் பைக்கை கிணற்றில் வீசி சென்றுள்ளனர் என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com