search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் புரோக்கர் அடித்துக்கொலை
    X

    கோவையில் புரோக்கர் அடித்துக்கொலை

    • வக்கீல் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
    • அஸ்வின் மற்றும் சீரஞ்சிவிக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம்பாளையத்தை சேர்ந்தவர் சீரஞ்சிவி (வயது 26). இவர் பழைய கார்களை வாங்கி விற்பது, கார் அடகு வைக்கும் தொழில் செய்து வந்தார். சவுரிபாளையத்தை சேர்ந்தவர் அஸ்வின்(39). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். 2 பேரும் சேர்ந்து தான் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வந்தனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஸ்வினிடம் ஒரு நபர், காரை கொடுத்து பணம் தருமாறு கூறியதாக தெரிகிறது. அதன்பேரில் அஸ்வினும் அந்த காரை வாங்கி, சீரஞ்சிவியிடம் கொடுத்தார். சீரஞ்சிவி அந்த காரை ரூ.3 லட்சத்திற்கு விற்று விட்டார்.

    இந்த நிலையில் அஸ்வினிடம் காரை கொடுத்த நபர் தனது கார் தனக்கு திரும்ப வேண்டும். அதனை தற்போது கொடுத்து விடு என கேட்டார்.

    இதனையடுத்து அஸ்வின், சீரஞ்சிவியை சந்தித்து, நான் உன்னிடம் கொடுத்த காரை திருப்பி கொடுத்து விடு. காரை கொடுத்த நபர் கேட்கிறார் என தெரிவித்தார்.

    அப்போது அவர் காரை விற்று விட்டதாக தெரிவித்தார். இதை கேட்டதும் அதிர்ச்சியான அஸ்வின் நான் உன்னிடம் அடகுக்காக தானே கொடுத்தேன். நீ எப்படி விற்கலாம் என தெரிவித்தார். இதனால் 2 பேருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக 2 பேருக்குமே முன்விரோதம் இருந்து வந்தது. இதற்கிடையே காரை கொடுத்த நபர் தொடர்ந்து போன் செய்து அஸ்வினிடம் காரை கேட்டு வந்தார்.

    இதனால் அவர் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் இதுகுறித்து தனது நண்பர்களான நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தை சேர்ந்த கண்ணன் (26), நாங்குநேரியை சேர்ந்த முத்தையா (வயது 33), வேடப்பட்டியை சேர்ந்த ஆனந்தபாபுவிடம் (49) தெரிவித்தார். இவர்களில் கண்ணன் டிரைவராகவும், முத்தையா வக்கீலாகவும், ஆனந்தபாபு பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தனர்.

    அஸ்வினின் புலம்பலை கேட்ட அவரது நண்பர்கள், சீரஞ்சிவியை சந்திக்க வர சொல். அவரிடம் இது சம்பந்தமாக பேசுவோம் என கூறினர்.

    அதன்படி கடந்த 22-ந் தேதி இரவு அஸ்வின் சீரஞ்சிவியை தொடர்பு கொண்டு உன்னிடம் பேச வேண்டும். மருதமலை ரோட்டிற்கு வா என அழைத்தார். இதனை நம்பி சீரஞ்சிவியும் அங்கு சென்றார்.

    அப்போது அங்கு அஸ்வின் தனது நண்பர்களுடன் நின்றிருந்தார். சீரஞ்சிவி வந்ததும், அஸ்வின் கார் சம்பந்தமான பேச்சை எடுத்தார். இதனால் 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த அஸ்வின் தனது நண்பர்களுடன் சேர்ந்து சீரஞ்சிவியை அங்கு கிடந்த கட்டை உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கினர். இதில் உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்து விட்டார்.

    பின்னர் அவரை அங்கேயே போட்டு விட்டு 4 பேரும் சென்று விட்டனர். மறுநாள் காலை அந்த வழியாக வந்த 2 பேர் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த சீரஞ்சிவியை பார்த்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதற்கிடையே சீரஞ்சிவி தாக்கப்பட்ட தகவல் ஆஸ்பத்திரி மூலமாக அவரது தந்தைக்கு தெரியவந்தது. உடனடியாக அவர் விரைந்து சென்று தனது மகனை மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    மேலும் இதுகுறித்து வடவள்ளி போலீசிலும் சீரஞ்சிவியின் தந்தை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அஸ்வின் உள்பட 4 பேர் மீதும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சீரஞ்சிவி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.

    தொடர்ந்து சீரஞ்சிவியை அடித்து கொலை செய்த அஸ்வின், அவரது நண்பர்களான கண்ணன், முத்தையா, ஆனந்தபாபு ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×