கோவிலுக்கு செல்லும் பாலம் இடிக்கப்பட்டதால்- கோவில்பட்டியில் கழிவு நீர் ஓடையில் இறங்கி சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின் பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக தற்காலிக இரும்பு பாலம் அமைக்கப்பட்டது.நேற்று அதிகாலை போலீஸ் பாதுகாப்புடன் காங்கிரீட் பாலம் அகற்றப்பட்டது.
பக்தர்கள் கழிவு நீர் ஓடையில் இறங்கி சாமி தரிசனம் செய்த காட்சி.
பக்தர்கள் கழிவு நீர் ஓடையில் இறங்கி சாமி தரிசனம் செய்த காட்சி.
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி பிரதான சாலை மார்க்கெட் அருகே கழிவு நீர்நீர்வரத்து ஓடையின் மேல்புறம் வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின் பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக தற்காலிக இரும்பு பாலம் அமைக்கப்பட்டு வழிபாடு செய்து வந்தனர். இந்நிலையில் அடுத்த மாதம் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் இரும்பு பாலத்தை அகற்றிவிட்டு கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டது. இதனை அகற்ற வலியுறுத்தி உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஓடை மீட்பு குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்து மனு அளித்தனர்.இதற்கிடையே பாலத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வணிக வைசிய சமுதாயத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இப்போது பாலத்தை இடிக்க மாட்டோம் என தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அதிகாலை கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமையில் தாசில்தார் சுசிலா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் லோகேஸ்வரன், சிவசுப்பு, இன்ஸ்பெக்டர்கள் சுகாதேவி, பத்மாவதி உட்பட போலீஸ் பாதுகாப்புடன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் காங்கிரீட் பாலம் அகற்றப்பட்டது.

இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல பாலம் இல்லாததால் கழிவு நீர் ஓடையில் இறங்கி சுவாமி, அம்பாளை வழிபட்டனர். இதில் பக்தர்கள் மற்றும் இந்து முன்னணியினர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com