மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை தடுப்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்

விவசாயிகளுக்கு மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி அளித்தனர். வேளாண்மைத் துறையினர் முறையான அறிவிப்பு செய்யாததால் ஒரு விவசாயி கூட கலந்து கொள்ளவில்லை.
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை தடுப்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை தடுப்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்
Published on

பல்லடம்,

பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரம் கிராமத்தில் மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக மாலை மலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் நேற்று விவசாயிகளுக்கு மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி அளித்தனர்.

இந்தப் பயிற்சி முகாமிற்கு பல்லடம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். பல்லடம் வேளாண்மை உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், பல்லடம் நடமாடும் மண் பரிசோதனை அலுவலர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் பாலாஜி வரவேற்றார். இந்த முகாமில் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் கவிதா, விவசாயிகளுக்கு படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்துவது குறித்து கூறுகையில் ,மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த கோடை உழவு செய்தல் மூலம் மண்ணில் உள்ள காடா புழுக்களை அழிக்கலாம் .அனைத்து விவசாயிகளும் பருவத்தில் ஒரே சமயத்தில் விதைப்பு செய்யவேண்டும். விதைப்பதற்கு முன் கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். 1 கிலோ மக்காச்சோள விதைக்கு, 10 கிராம் 'பவேரியா பேஷியானா' எனும் நுண்ணுயிர் பூச்சிக்கொல்லி அல்லது, 10 கிராம் 'தயோமீதாக்சம்' 30 சதம் எப்.எஸ்.மருந்து கொண்டு விதை நேர்த்தி செய்யலாம். மக்காச்சோளபயிர் நெருக்கமாக இருந்தால் படைப்புழு வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, வரிசைக்கு 60 செ.மீ.அளவும், பயிருக்கு பயிர் 25 செ.மீ. அளவு இடைவெளி விட்டு நட வேண்டும்.மேலும் மக்காச்சோளம் விதைக்கும் போது அதனுடன் வயல் ஓரங்களில் தட்டைப்பயிறு, ஆமணக்கு, சூரியகாந்தி ஆகியவற்றை விதைப்பதன் மூலம் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் விளக்கமளித்தார்.முன்னதாக சிறு, குறு விவசாயிகளுக்கான பட்டா மாறுதல், சொட்டுநீர் பாசன சிறப்பு முகாம் நடைபெற்றது. எனினும் இதற்காக வேளாண்மைத் துறையினர் முறையான அறிவிப்பு செய்யாததால் ஒரு விவசாயி கூட கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com