ஆட்டோவை திருடியவர் கைது

கோவில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ காணாமல் போனது.கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
ஆட்டோவை திருடியவர் கைது
Published on

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை சேர்ந்தங்குடி ஆனதாண்டவபுரம் சாலை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சரவணன் (வயது 39).

ஆட்டோ டிரைவரான இவர் அந்த பகுதியில் உள்ள வள்ளலார் கோவிலில் இரவு காவலராகவும் இருந்து வருகிறார்.

சம்பவத்தன்று ஆட்டோ சவாரிகளை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு வள்ளலார் கோவில் வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு கோவிலுக்குள் சென்றுள்ளார்.

அதிகாலை 5 மணிக்கு வெளியே வந்து பார்த்தபோது ஆட்டோ காணாமல் போயிருந்தது. இது குறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் அளித்திருந்தார்.

புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஆட்டோவை திருடி சென்றவர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த பாலாஜி மகன் கட்டக்கால் கலியமூர்த்தி என்கிற கலியமூர்த்தி (36) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து கலியமூர்த்தியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த திருடி சென்ற ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட கலியமூர்த்தி மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்த கலியமூர்த்தி மீது தாம்பரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் ஏற்கனவே மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோக்கள் திருடியதாக வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com