search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் தேர்பவனி
    X

    ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் தேர்பவனி

    • ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் தேர்பவனி நடைபெற்றது
    • இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம், திருக்காவலூர் எனும் ஏலாக்குறிச்சியில் புகழ் பெற்ற புனித அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. 1716 ஆண்டு வீரமாமுனிவரால் கட்டப்பட்டு, தமிழக அரசின் ஆன்மீக சுற்றுலா தளங்களில் ஒன்றான இந்த பழமை வாய்ந்த ஆலயத்தில் 53 அடி உயரமுள்ள பித்தளையிலான மாதா சொரூபம், ஜெபமாலை பூங்கா அமைந்து உள்ளது தனிச்சிறப்பு. இந்த ஆலயத்தின் 292-ம் ஆண்டு திருவிழா கடந்த ஏப்ரல் 22 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. இதற்காக மாலை 7 மணிக்கு கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் தேர்திருவிழா சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பங்குதந்தை அதிபர் தங்கசாமி மின்விளக்குகளுடன் அலங்கரிக்கபட்ட அலங்கார தேரை மந்திரித்து தேர்பவனியை தொடங்கி வைத்தார். வாணவேடிக்கை , வாத்தியங்கள் முழங்க தேர்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

    தேர்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் வேண்டுதலாக ஆடு, கோழி, விளை நிலங்களில் விளைந்த விளைபொருட்களை காணிக்கையாக செலுத்தினர். திருவிழா குறித்து பங்குத்தந்தை கூறுகையில், ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

    மேலும் பக்தர்கள் தங்களின் உடல் நோயை தீர்க்க, மந்திரிக்கப்பட்ட மாதா எண்ணையையும், மாதா குளத்து மண்ணையும் பெற்று செல்கின்றனர், இன்று இரவு 7 மணிக்கு உய்யகொண்டான் திருமலை பங்குதந்தை அம்புரோஸ் தலைமையில் தேர்திருப்பலியும் தேர்பவனியும் நடைபெறும். மே1-ந்தேதி காலை 6 மணிக்கு பங்குதந்தை தங்கசாமி மற்றும் உதவி பங்குதந்தை ஞான அருள்தாஸ் ஆகியோரால் கொடி இறக்கம் நடைபெற்று திருவிழா நிறைவடைய உள்ளது என்று கூறினார்.

    திருவிழாவை முன்னிட்டு டி.எஸ்.பி. சங்கர்கணேஷ் தலைமையில், திருமானூர் இன்ஸ்பெக்டர் அனிதா ஆரோக்கியமேரி மேற்பார்வையில் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருமானூர் எஸ் ஐ கட்டுப்பாட்டில் 30 சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்றது. திருமானூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன் தலைமையில் மருத்துவக்குழு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

    Next Story
    ×