

அரியலூர்:
அரியலூர் மாவட்டம் வெளிப்பிரிங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கண்ணதாசன்(வயது40). இவர், கடந்த 2012-ம் ஆண்டு வெளிப்பி ரிங்கியத்திலிருந்து கீழப்பழுவூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து மோதியதில் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி ரேணுகா தொடர்ந்த வழக்கில், அரியலூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.6.70 லட்சம் இழப்பீடு தர விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து கிளை கழகத்துக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை நீதிமன்றத்தில் விழுப்புரம் கோட்டம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரியலூர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.
ஆனாலும், இழப்பீடு தொகை தராததால், ரேணுகா மீண்டும் அரியலூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையெனில் பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயங்கொண்டம் அடுத்த குறுக்கு ரோட்டுக்கு சென்ற நீதிமன்ற ஊழியர்கள் விழுப்புரத்திலிருந்து ஜெயங்கொண்டம் வழியாக திருச்சி வந்த விழுப்புரம் கோட்ட அரசு பேருந்தை ஜப்தி செய்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.