search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் ஆய்வு

    • அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
    • இதுவரை தூர்வாரப்பட்டுள்ள நீளம் குறித்தும் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

    அரியலூர்,

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவிற்கிணங்க நீர்வளத்துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில், மருதையாறு வடிநிலக்கோட்டம், அரியலூர் மற்றும் ஆற்று பாதுகாப்புக்கோட்டம், திருச்சி கட்டுப்பாட்டில் உள்ள வரத்து வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள், உபரி நீர் வாய்க்கால்கள், ஓடை மற்றும் வடிகால்கள் முட்புதர்கள் மண்டியும் மண்மேடிட்டு தூர்ந்தும் காணப்பட்டது.

    மேலும் நீர் வெளியேற்றும் திறன் குறைந்து தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ள நீர் முழுமையாக வடிய இயலாமல் பாசன நிலங்களில், நீர்தேங்கி விவசாய சாகுபடி பயிர்களுக்கும் மற்றும் நிலங்களுக்கும் சேதம் ஏற்படுத்தி உள்ளது. எனவே 13 தூர்வாரும் பணிகள் 42.80 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு கல்லணைக்கு தண்ணீர் வரும் காலத்திற்குள் பணிகளை முடிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து 13 பணிகளும் போர்க்கால அடிப்படையில் துவங்கி 10.06.2023-க்கு முன் அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்பட உள்ளது. இதில் சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டத்தின்கீழ் மருதையாறு வடிநிலக்கோட்டத்தில் அரியலூர் வட்டத்தில் பெரிய நாகலூர் ஓடை, அருங்கால் ஓடை, உடையார்பாளையம் வட்டத்தில் சோழமாதேவி கிராமம் 4-வது புதிய பிரதான வாய்க்கால், சிந்தாமணி ஓடை, சித்தமல்லி நீர்த்தேக்க உபரிநீர் வாய்க்கால், கருவாட்டு ஓடை (பொன்னேரி வரத்து வாய்க்கால்) ஆகியவற்றுக்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஒரு சில பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக மழைநீர் தேங்கி உள்ளதாலும், ஈரப்பதம் அதிகமாக உள்ளதாலும், தூர்வாரும் பணி சற்று தாமதமாக நடைபெறுவதாக அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. அனைத்து பணிகளையும் விரைவாகவும், முழுமையாகவும் வரும் 31.05.2023–க்குள் முடித்து கரைகளை பலப்படுத்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியும், பாசன வாய்க்கால் மூலமாக பயனடையும் விவசாய நிலங்களின் பரப்பளவு குறித்தும், இதுவரை தூர்வாரப்பட்டுள்ள நீளம் குறித்தும் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து நீர்வளத்துறை அலுவலர்கள் கூறுகையில், தற்போது வரை 25 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. பணிகள் முடிவடையும் போது சுமார் நான்காயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயனடையும் என கலெக்டர் பெ.ரமண சரஸ்வதியிடம் தெரிவித்தனர். இந்த ஆய்வில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி செயற்பொறியாளர் சாந்தி, உதவி பொறியாளர் தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×