search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க போதிய நிதி உதவிகள் வழங்கப்படும் - அரியலூர் கலெக்டர் தகவல்
    X

    கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க போதிய நிதி உதவிகள் வழங்கப்படும் - அரியலூர் கலெக்டர் தகவல்

    • கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும்.
    • சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை புனரமைத்தல் மற்றும் பழுது நீக்குதல் பணிகள் மேற்கொள்வதற்காக நிதியுதவி அளிக்கும் திட்டம் 2016-2017 ஆம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுது மற்றும் தேவாலய கட்டடத்தின் வயது ஆகியவற்றை கருத்திற்கொண்டு 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சமும், 15-20 வருடமாக இருப்பின் ரூ.2 லட்சமும், 20 வருடத்திற்கு மேலிருப்பின் ரூ.3 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான தகுதிகளாக கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேவாலயமும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

    தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது என்ற சான்றிதழ் அளிக்க வேண்டும். சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும்.

    கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைத்தல் மற்றும் பழுது நீக்குதலுக்கான விண்ணப்படிவம் மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகியோ இணையதள முகவரியிலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விண்ணப்படிவம் மற்றும் சான்றிதழை பூர்த்தி செய்து, அதில் கோரப்பட்டுள்ள ஆவணங்களோடு மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவினரால் அவ்விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, கிறிஸ்தவ தேவாலயங்களை தர ஆய்வு செய்து, கட்டடத்தின் வரைப்படம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி மாவட்ட கலெக்டரால் பரிந்துரை செய்யப்படும்.

    நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×