search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாக பொய் பிரசாரத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை: அண்ணாமலை கோரிக்கை
    X

    வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாக பொய் பிரசாரத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை: அண்ணாமலை கோரிக்கை

    • தி.மு.க. தொடங்கிய காலத்தில் இருந்து, தற்போது வரை, ஏதோ ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை விதைத்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.
    • ஒரு சாரார் மீது தமிழகத்தில் கட்டமைக்கப்பட்ட வெறுப்புப் பிரசாரத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சென்னை :

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவது வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தி தொழில், சேவைத்துறை மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளில், வட இந்திய தொழிலாளர்களின் பெரும்பங்கை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். வட இந்திய நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதத்தையும், வெறுப்பு பிரசாரத்தையும், தமிழர்களாகிய நாங்கள் ஆதரிக்கவில்லை.

    வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், அனைத்து மக்களையும் வரவேற்று அரவணைத்து அவர்களை சமூகத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. வட இந்திய சகோதர-சகோதரிகளின் பங்களிப்பை தமிழ்நாட்டின் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டு வரவேற்கின்றனர். ஆகவே, தமிழகத்தில் வட இந்தியர்கள் தாக்கப்படுவதாக பொய் செய்திகள் பரப்பப்படுவதை தமிழக பா.ஜ.க. கடுமையாக எதிர்க்கிறது. இது போன்ற பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    தி.மு.க. ஆரம்பித்த இந்தி எதிர்ப்பு எனும் நடவடிக்கைகளில் தொடங்கிய இந்த வெறுப்பு பிரசாரம், தற்போது ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு வந்திருக்கிறது. இந்தி எதிர்ப்பு என்ற பெயரில், வட மாநில மக்களை ஏளனமாகப் பேசுவதும், அவர்கள் செய்யும் தொழில்களை அவமானப்படுத்துவதுமான தி.மு.க. கலாசாரத்தின் விளைவுதான் இன்றைய நிலைக்கு காரணம்.

    தி.மு.க. தொடங்கிய காலத்தில் இருந்து, தற்போது வரை, ஏதோ ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை விதைத்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த 2 ஆண்டுகளில் தி.மு.க. எம்.பி.க்கள், அமைச்சர்கள் பேசிய ஏளனப் பேச்சுக்கள் எத்தனை? வட இந்திய சகோதரர்கள் மேல் இத்தனை வன்மப் பிரசாரம் நடந்தும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இவர்களை கண்டித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஒரு சாரார் மீது தமிழகத்தில் கட்டமைக்கப்பட்ட வெறுப்புப் பிரசாரத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தி.மு.க. இத்தனை ஆண்டுகளாக, வட மாநில மக்களுக்கு எதிராக தொடர்ந்து செய்து வரும் இது போன்ற வெறுப்பு பிரசாரத்தின் காரணமாக, தற்போது பரவி வரும் போலியான காணொலிகள் கூட உண்மையாக இருக்குமோ... என்று எண்ணும் அளவுக்கு வட மாநிலங்களில் வசிக்கும் சகோதரர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த அச்சத்தை களைவது தி.மு.க.வின் பொறுப்பு. தமிழக பா.ஜ.க. சார்பில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க.வினர், வடமாநில சகோதரர்களை சந்தித்து இந்த பொய் பிரசாரங்களை எடுத்துக்கூறி, அவர்கள் பாதுகாப்புக்கு தமிழக பா.ஜ.க. என்றுமே உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளித்து வருகிறார்கள்.

    இனிமேலாவது, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தன் கட்சிக்காரர்கள் மற்றும் கூட்டணி கட்சிக்காரர்கள், வடமாநில சகோதரர்கள் மேல் தொடரும் வெறுப்பு பிரசாரத்தை அனுமதிக்காமல் கடுமையான நடவடிக்கை எடுத்து, தமிழகத்தின் மாண்பைக் காப்பார் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×