என் மலர்
உள்ளூர் செய்திகள்

அம்மாபேட்டை அருகே தனியார் நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து சாவு: உறவினர்கள் தர்ணா
- 7 ஆண்டுகளாக மிஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
- நெஞ்சு வலிப்பதாக சக பணியாளர்களிடம் கூறியுள்ளார்.
அம்மாப்பேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பட்லூர் பாரதிநகரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகன் சரவண க்குமார் (வயது 29). இவர் பூனாச்சியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மில்லில் கடந்த 7 ஆண்டுகளாக மிஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை 6 மணிக்கு வழக்கம்போல சரவணகுமார் வேலைக்கு சென்றுள்ளார்.
மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, நெஞ்சு வலிப்பதாக சகப் பணியாளர்களிடம் கூறிய சரவணக்குமார் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பூனாச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த போது சரவணக்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சரவணகுமாரின் பெற்றோருக்கு தனியார் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சரவணக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சரவணகுமாரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று மதியம் பூனாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மில் முன்பு உயிரிழந்த சரவணகுமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு நிறுவனத்தை முற்றுகையிட முயன்றனர். தொடர்ந்து அவர்கள் நிறுவனத்தின் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் (பொ) தலைமையிலான போலீசார் சரவணகுமாரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டம் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கைவிடப்பட்டது.
மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பவானி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






