கோவையில் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

மகேஷ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையில் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
Published on

சரவணம்பட்டி,

கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் மகேஷ் (வயது35).

இவர் கோவில்பாளையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.

சம்பவத்தன்று இரவு மகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார்.

நேற்று காலை வேலை முடிந்து மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த முத்துராஜா என்பவரும் வந்தார். மோட்டார் சைக்கிளை மகேஷ் ஓட்டினார்.

மோட்டார் சைக்கிள் கோவை சத்தி ரோட்டில் குரும்பபாளையம் அருகே உள்ள தனியார் எடை மேடை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே கார் ஒன்று வந்தது. அந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த மகேஷ், முத்துராஜ் தூக்கி சாலையில் வீசப்பட்டனர். இதில் மகேஷ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

முத்துராஜ் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த முத்துராஜை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இறந்த மகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com