நான்குவழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு கோரி குடும்பத்துடன் கருப்புக்கொடியேந்தி வக்கீல் தர்ணா

ரமேஷ் பால்துரைக்கு சொந்தமான நிலம் ஆலங்குளம்-நெல்லை சாலையில் உள்ளது. சாலை அமைக்க வந்த ஊழியர்களை ரமேஷ் பால்துரை தடுத்து நிறுத்தினார்.
குடும்பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட்ட வக்கீல்.
குடும்பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட்ட வக்கீல்.
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள கரும்புளியூத்து கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் பால்துரை(வயது 41). இவர் வக்கீல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் ஆலங்குளம்-நெல்லை சாலையில் உள்ளது.

இதில் முகப்பு பகுதியில் உள்ள குறைந்த அளவு நிலத்தை நான்கு வழச்சாலை விரிவாக்க பணிக்கு கையகப்படுத்தப்பட்டதாகவும், இதுவரை நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காமல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த இடத்தில் சாலை அமைக்க வந்த ஊழியர்களை ரமேஷ் பால்துரை தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து அவர் தனது குடும்பத்தினருடன் கருப்புக் கொடியுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

உடனே ஆலங்குளம் தாசில்தார் கிருஷ்ணவேல், சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை மற்றும் நான்கு வழிச்சாலை திட்ட அலுவலர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய ஆவணங்கள் சமர்பிக்குமாறும், மறுநாளே இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து அவர் தர்ணாவைக் கைவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com