

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள எலவடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் வெங்கடேஷ் (வயது 24). இவர் அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் வாலிபால் விளையாட முடிவு செய்தனர். போதிய வெளிச்சம் இல்லாததால், விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இருந்த மின் கம்பத்திலிருந்து மின்சாரம் எடுத்து மின் விளக்கினை பொருத்த முயற்சி செய்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக வெங்கடேஷ் மீது மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கடேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிந்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.