search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க நடவடிக்கை
    X

    திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை கலெக்டர் சரயு ஆய்வு செய்த போது எடுத்தபடம்.

    நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க நடவடிக்கை

    • தற்போது இருப்பில் உள்ள 7,500 டன் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக தார்பாலின் போட்டு வைக்கப்பட்டுள்ளது.
    • இன்னும் 3 நாட்களில், மாவட்டத்தில் உள்ள 62 அரவை முகவர்களுக்கு நெல் மூட்டைகள் விநியோகித்து அரவை செய்யப்படவுள்ளது.

    ஓசூர்,

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ரெயில்கள் மற்றும் லாரிகள் மூலமும் மற்றும் விவசாயிகளிடமிருந்தும் தருவிக்கப்பட்ட நெல் மூட்டைகள், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தளி சாலையில் உள்ள அந்திவாடி விளையாட்டு மைதானத்திற்கு பக்கத்தில், திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நெல்மூட்டைகள் எந்தவித பாதுகாப்பும் இன்றி, திறந்த வெளியில் குவியல் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    தற்போது மழை காலமாக இருப்பதாலும், பருவ மழையும் தொடங்கி விட்டதாலும் இந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முழுவதுமாக சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தவிர, அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள மூட்டைகளிலிருந்து நெல்மணிகள் குவியல், குவியலாக கீழே கொட்டி சிதறிக்கிடக்கின்றன.

    இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு கீழே கொட்டி கிடப்பதாலும், நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவதாலும் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் அங்குள்ள நெல் மூட்டைகளை, மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    இங்கு தற்போது இருப்பில் உள்ள 7,500 டன் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக தார்பாலின் போட்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 நாட்களில், மாவட்டத்தில் உள்ள 62 அரவை முகவர்களுக்கு நெல் மூட்டைகள் விநியோகித்து அரவை செய்யப்படவுள்ளது.

    நெல்மூட்டைகள் எதுவும் மழையால் நனைந்து சேதமடையவில்லை. மாவட்ட பொறுப்பு மற்றும் உணவுத்துறை அமைச்சரின் அறிவுறுத்தின்படி 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில், நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சக்தி சரள், தாசில்தார் சுப்பிரமணி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×