

உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் தங்கி இருந்த தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை செட்டி யாபத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், உடன்குடி கூட்டுறவு வங்கி தலைவர் அசாப் அலி பாதுஷா,உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.முக. செயலாளர் இளங்கோ மற்றும் முத்துராமலிங்கம் உட்பட தி.முக.வினர் பலர் நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்து நிறைவேற்றுக்கோரி வற்புறுத்தினர்.
அந்த மனுவில் கூறியிருந்தாவது:-
செட்டியாபத்து ஊராட்சிக்கு உட்பட்ட சிவலூரில் புதியதாக ரேஷன்கடை அமைக்க வேண்டும்என்றும், இப்பகுதியில் உள்ள மக்கள் பல கிலோமீட்டர் தூரம்நடந்துசென்று ரேஷன் பொருட்கள் வாங்குவதால் மிகவும் சிரமமாக உள்ளது.
ரேஷன் பொருள் எப்போது வினியோகம் செய்யப்படுகிறது என்பது தெரியாமல் குழம்பி வருகின்றனர். அதனால் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.