search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜவுளித்துறையை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- மத்திய மந்திரி பியூஸ் கோயலிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை
    X

    ஜவுளித்துறையை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- மத்திய மந்திரி பியூஸ் கோயலிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

    • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    • காரணம்பேட்டையில் ஜவுளி சந்தை இருந்தால் விவசாயிகள் பயனடைவார்கள்.

    கோவை:

    ஜவுளித்துறையை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயலிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மனு கொடுத்தனர்.

    மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து ெகாள்ள கோவை வந்தார். இந்த நிலையில் அவரை நேற்று இரவு எதிர்க்கட்சி கொறடாவும். முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி சந்தித்து கோரிக்கை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பருத்தியின் விலை ஏற்றத் தாழ்வு காரணமாக, ஸ்பின்னிங் மில்ஸ் விசைத்தறிகள், கைத்தறி ஜவுளி மற்றும் ஆடைகள் ஆகியவற்றின் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, தொழில்துறை வளர்ச்சியில் ஆபத்து உள்ளது. எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இந்தியாவில் ஜவுளி சந்தை இப்போது அகமதாபாத்தில் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் சோமனூர் அல்லது பல்லடம் அல்லது காரணம்பேட்டையில் ஜவுளி சந்தை இருந்தால் விவசாயிகள் பயனடைவார்கள். விவசாயிகள் எதிர்பார்க்கும் மானியம் வழங்கினால் விவசாயிகள் அதிக பருத்தியை உற்பத்தி செய்வார்கள். ஜவுளித் தொழிலின் வளர்ச்சிக்கு மின்சார மானியம் வழங்க வேண்டும். கோவை சத்தி மெயின் ரோட்டில் இருந்து கணபதி எப்.சி.ஐ இந்திய உணவுக் கழகத்தின் சொந்தச்சாலை )ரோடு வரை மிகவும் பரிதாபமாக உள்ள சாலையை சீரமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    என்.டி.சி.மில்ஸ் வியாபாரத்தில் மிகவும் பின்தங்கி விட்டதால், அந்த ஆலைகளை மேம்படுத்த சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், பலருக்கு வேலை கிடைக்கும். இந்தியாவில் பருத்தி உற்பத்தி அமெரிக்கா மற்றும் சீனாவுடன் ஒப்பிடுகையில் தரமற்றதாக உள்ளது. எனவே விதை வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்துவதன் மூலம் அதிக பருத்தி ஹெக்டேர் உற்பத்தி செய்ய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஜவுளித்துறை சம்பந்தமான தொழில்களில் வட இந்திய தொழிலாளர்கள் அதிகம் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு தங்குவதற்கு போதிய இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    எனவே வாடகை அடிப்படையில் ஒருதற்காலிக தங்குமிடம் அல்லது நிரந்தர குடியிருப்பு வழங்கினால் நன்றாக இருக்கும். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ மருத்துவமனை மூலம் மருத்துவ உதவி செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மத்திய மந்திரி முருகன், பாரதீய ஜனதா தலைவர், அண்ணாமலை, வானதி சீனிவாசன், எம்.எல்.ஏ., அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை குறித்து எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம், தரப்பினர் இடையே கோஷ்டி மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் கோவை வந்த மத்திய மந்திரி பியூஸ் கோயலை எதிர்க்கட்சி கொறடாவும்,முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுடன் சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பின் போது மந்திய மந்திரி முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×