

நெல்லை:
நெல்லையை அடுத்த தச்சநல்லூர் ராமையன் பட்டி சிவாஜி நகரை சேர்ந்தவர் தொழிலாளி பெருமாள். இவர் இன்று தனது உறவினர்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் இந்து அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவன். எனக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகிறது. எனக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. எனது மனைவி பேச்சியம்மாள் 2-வதாக கருவுற்றிருந்தார்.
எனது மனைவிக்கு கடந்த 5-ந்தேதி காலை பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு கல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றேன்.
அங்கு அவரை முறையாக பரிசோதிக்காமல் உடனடி யாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். அப்போது ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் ஆட்டோவில் எனது மனைவியை கொண்டு சென்றேன். ஆனால் ஆஸ்பத்திரியை சென்றடைந்த உடனே எனது மனைவிக்கு உடலை விட்டு குழந்தை வெளியே வந்துவிட்டது.
சிகிச்சைக்காக சேர்க்கும் போது எனது குழந்தை இறந்து விட்டது. கல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் பணி செய்யும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியம் காரணமாகவே எனது மனைவியின் பிரசவம் தாமதமாகி குழந்தை இறந்து விட்டது.
எனவே கடந்த 5-ந்தேதி கல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீது வன்கொ டுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.