என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணப்பாறை அருகே விபத்தால் சாலையில் நின்ற லாரி மீது  மற்றொரு லாரி மோதல்- டிரைவர் பலி
    X

    மணப்பாறை அருகே விபத்தால் சாலையில் நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதல்- டிரைவர் பலி

    • காயமடைந்த அப்துல் சித்திக் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
    • மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சுற்றுலா வேன் சென்றுகொண்டிருந்தது. இந்த வேன் துவரங்குறிச்சி முக்கன்பாலம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த ஆம்னி பேருந்தும் வேனும் மோதிக்கொண்டன.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னால் வந்த வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. சற்று தொலைவில் உள்ள வனத்துறை அலுவலகம் வரை வாகனங்கள் வரிசையாக நின்றன.

    கடைசியாக வனத்துறை அலுவலகம் அருகே தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு டிங்கரிங் பவுடர் ஏற்றி சென்ற லாரி நின்றது. இந்த வேளையில் அந்த வழியாக திருச்சியை நோக்கி காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வேகமாக வந்தது.

    லாரியை டிரைவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜமீர் அகமது (38) என்பவர் ஓட்டினார். அருகில் கிளீனர் அப்துல் சித்திக்(45) அமர்ந்திருந்தார். அதிகாலை வேளை என்பதால் முன்னால் லாரி நின்றுகொண்டிருந்ததை டிரைவர் ஜமீர் அகமது கவனிக்கவில்லை.

    எதிர்பாராதவிதமாக முன்னால் நின்ற லாரி மீது காலி சிலிண்டர் லாரி பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் டிரைவர் ஜமீர் அகமது சம்பவ இடத்திலேயே பலியானார். கிளீனர் அப்துல் சித்திக் இடிபாடுகளுக்குள் சிக்கிகொண்டனர்.

    விபத்து பற்றி தகவல் கிடைத்த துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பலியான ஜமீர் அகமது உடலையும், காயம் அடைந்த அப்துல் சித்திக்கையும் கடுமையாக போராடி மீட்டனர். பலத்த காயமடைந்த அப்துல் சித்திக் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    துவரங்குறிச்சி போலீசார் விரைந்து வந்து பலியான ஜமீர் அகமது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×