search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கழிவுகளை கொட்ட வந்த டிராக்டர்
    X

    மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கழிவுகளை கொட்ட வந்த டிராக்டர்

    • பொதுமக்கள் சுற்றி வளைத்து சிறைபிடித்து வாக்குவாதம்
    • உருளைக்கிழங்கு கழிவுகளால் உயிரிழப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இது பவானி ஆற்றங்கரையில் அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது. எனவே காட்டு யானை, மான்,காட்டெருமை, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

    மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டியில் வீணாகும் கழிவுகள், நள்ளிரவு நேரத்தில் டிராக்டர்கள் மூலம் கொண்டு வரப்பட்டு சமயபுரம் பவானி ஆற்றங்கரையோரம் கொட்டப்பட்டு வருகின்றன. இதனை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வளர்க்கும் கால்நடைகள் உண்டு வருகின்றன.

    இதே பகுதியில் வசிக்கும் பூவாத்தாள் என்பவரது பசுமாடு கடந்த சில நாட்களுக்கு முன்பு உருளைக்கிழங்கு மண்டி கழிவுகளை தின்று வயிறு வீங்கி பரிதாபமாக பலியானது. இதுதொடர்பாக சமயபுரம் பொதுமக்கள் வனத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனாலும் நடவடிக்கை இல்லை.

    இந்த நிலையில் மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டியில் இருந்து காய்கறிகழிவுகளை ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் பவானி ஆற்றங்கரையோரம் வந்தது. அப்போது இதனை அங்கு உள்ள பொதுமக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே உருளைகிழங்கு கழிவுகளை ஏற்றி வந்த டிராக்டர், மீண்டும் வந்தவழியே திரும்பிச்சென்றது.

    இதுகுறித்து சமயபுரம் பொதுமக்கள் கூறுகையில் மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டிகளில் சேகரமாகும் கழிவுகளை டிராக்டர்களில் ஏற்றி வந்து சட்டவிரோதமாக சமயபுரம் பகுதியில் பவானி ஆற்றங்கரையோரம் கொட்டி வருகின்றனர். இதனை கால்நடைகள் மட்டுமின்றி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகளும் சாப்பிட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    ஏற்கனவே வனவிலங்குகள் தொல்லையால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் தற்போது உருளைக்கிழங்கு மண்டி கழிவுகளை சாப்பிட்டு கால்நடைகளும், வனவிலங்குகளும் உயிரிழக்கும் அபாயநிலை ஏற்பட்டு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் உருளைக்கிழங்கு மண்டி கழிவுகளை பவானி ஆற்றங்கரையில் கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×