search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் பாட்டிலுக்கு  ரூ.1 வழங்கும் திட்டம்- நெல்லையில் 3 நாட்களில் 5 ஆயிரம் பாட்டில்கள் சேகரிப்பு
    X

    மாற்றுதிறனாளி ஒருவர் தூய்மை பணியாளரிடம் 25 காலி பாட்டில்கள் கொடுத்து விட்டு ரூ.25 பெற்று சென்ற காட்சி.

    பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ரூ.1 வழங்கும் திட்டம்- நெல்லையில் 3 நாட்களில் 5 ஆயிரம் பாட்டில்கள் சேகரிப்பு

    • கடந்த 23-ந்தேதி காலி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கொடுத்தால் ஒரு ரூபாய் வழங்கும் திட்டம்தொடங்கப்பட்டது.
    • திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசப்படுவதால் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் கூறியிருந்தனர்.

    பாட்டிலுக்கு ஒரு ரூபாய்

    இதற்கு நிரந்தர தீர்வு காணுவது குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிப்பது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி முதல் முறையாக டவுன் மண்டலத்தில் காலி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கொடுத்தால் ஒரு ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த 23-ந்தேதி தொடங்கப்பட்டது.நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனை பேரில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின் பேரில் இந்த திட்டமானது டவுன் சுகாதார அலுவலகத்தில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தொடங்கப்பட்டது.

    பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக இந்த திட்டமானது தமிழகத்தில் நெல்லை மாநகராட்சியில் முதல் முதலாக தொடங்கப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கப்பட்டு இன்று வரை 3 நாட்களுக்குள் சுமார் 5 ஆயிரம் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

    இந்த திட்டமானது பொதுமக்களின் நலன் கருதி தொடங்கப்பட்ட திட்டம் எனவும், மக்களின் நிலை உயரவும் மக்களின் நலனை கருத்தில் கொண்டும் அரசுக்கு சில நேரங்களில் நஷ்டம் ஏற்பட்டாலும் அதனை கருத்தில் கொள்ளக்கூடாது என்ற முடிவுக்கு ஏற்ப நெல்லையில் இந்த புதிய முயற்சி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது. குறைந்தது ஒரு வாரத்திற்குள் ஒரு டன் அளவிலான பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிப்பது என்ற நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×