search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிக்கட்டியில் மேற்கூரை இல்லாமல் காணப்படும் பயணிகள் நிழற்குடை
    X

    பிக்கட்டியில் மேற்கூரை இல்லாமல் காணப்படும் பயணிகள் நிழற்குடை

    • கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, அரசு உயர் நிலைப்பள்ளி, பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்டவைகளும் பிக்கட்டி பகுதியில் அமைந்துள்ளது.
    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் நிழற்குடையின் மேற்கூரை பழுதடைந்தது.

    மஞ்சூர்,

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது பிக்கட்டி. இதை சுற்றிலும் முள்ளிகூர், கெரப்பாடு, ஒசட்டி, பாரதியார்புதுார், குந்தா, கோத்தகிரி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.

    இப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது எந்த ஒரு அத்தியாவசிய தேவைகளுக்கும் பிக்கட்டி பகுதிக்கு சென்று அங்கிருந்து அரசு பஸ்கள் மற்றும் வாகனங்களில் நகர பகுதிக்கு சென்று வர வேண்டும்.

    இது தவிர கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, அரசு உயர் நிலைப்பள்ளி, பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்டவைகளும் பிக்கட்டி பகுதியில் அமைந்துள்ளது. பிக்கட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை ஒட்டி பஸ் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவ, மாணவிகள், அரசு, தனியார்துறை ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அரசு பஸ்கள் வரும் வரை மேற்படி நிழற்குடையில் காத்திருப்பார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் நிழற்குடையின் மேற்கூரை பழுதடைந்தது. இதை தொடர்ந்து பழுதடைந்த மேற்கூரை இடித்து அகற்றப்பட்டது.

    இந்நிலையில் மேற்கூரை அகற்றப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நிழற்குடையை பயணிகள் பயன்படுத்த முடியாதநிலை உள்ளது.

    மழை நேரங்களில் பஸ்கள் வரும் வரை நனைந்தபடியே சாலையோரத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் நலன் கருதி உடனடியாக நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×