தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் குரூஸ் பர்னாந்திற்கு மணிமண்டபம் அமைக்காவிட்டால் போராட்டம்- மீனவ அமைப்பினர் அறிவிப்பு

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. குரூஸ் பர்னாந்துக்கு நகரின் மத்திய பகுதியில் மணிமண்டபம் அமைத்து கவுரவப்படுத்த வேண்டும் .
ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகர தந்தை என்று அழைக்கப்படுபவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து. இவருக்கு தூத்துக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடற்கரை சாலையில் உள்ள ரோச் பூங்கா பகுதியில் மணிமண்டபம் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால் நகரின் மையப்பகுதியில் அமைக்காமல் இங்கு அமைப்பதற்கு மீனவமக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக குருஸ் பர்னாந்து நற்பணிமன்ற தலைவர் ஹெர்மன் கில்டு கூறியதாவது:-

தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் கொண்டு வந்த குரூஸ் பர்னாந்துக்கு நகரின் ஒதுக்குப்புறத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு மீனவ மக்களின் மனதை வேதனைப்படுத்தி உள்ளது. அனைத்து சமுதாய மக்களுக்கும் தொண்டு ஆற்றிய அவருக்கு நகரின் மத்திய பகுதியில் மணிமண்டபம் அமைத்து கவுரவப்படுத்த வேண்டும் . இல்லை என்றால் கடற்கரை பகுதி மீனவமக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் குரூஸ் பர்னாந்து நற்பணி மன்றம் சார்பில் அனைத்து மீனவ அமைப்புகளுடன் ஆலோசனை தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் குரூஸ் பர்னாந்து நற்பணி மன்ற எட்வின் பாண்டியன், தலைவர் ஹெர்மன் கில்டு, செயலாளர் சசிக்குமார், பொருளாளர் டெரன்ஸ், வளன் ஆண்ட்ரூஸ், லூர்துசாமி, ராஜ், அலாய், அமலநாதன், கென்னடி, சாக், ஜெபி, பரதநலச் சங்கம் பொதுக் செயலாளர் கனகராஜ், இக்னேஷியஸ், ரூஸ்வால்ட், ராஜேந்திரன், முன்னாள் துணை மேயர் சேவியர், முன்னாள் நகர்மன்ற தலைவர் மனோஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் அகஸ்டின், மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com