திண்டுக்கல் புனித செபஸ்தியார் கோவில் திருவிழாவில் விடிய விடிய நடக்கும் அசைவ விருந்து

திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். திருப்பலியும், பக்தர்கள் காணிக்கை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திண்டுக்கல் புனித செபஸ்தியார் கோவில் திருவிழாவில் விடிய விடிய நடக்கும் அசைவ விருந்து
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல்-பழனி சாலையில் முத்தழகுபட்டியில் பழமையான புனித செபஸ்தியார் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக செபஸ்தியார் உருவம் பொறித்த கொடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு 60 அடி கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டது.

அப்போது சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்களும் பறக்க விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் பக்தர்கள் காணிக்கை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த கோவிலில் திருவிழாவுக்கு பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் வந்திருந்து காணிக்கை வழங்குவது வழக்கம்.

செபஸ்தியாரிடம் ஏதாவது ஒரு வேண்டுகோள் வைத்து அது நிறைவேறியவுடன் காணிக்கையாக ஆடு, கோழி, சேவல், அரிசிமூடை, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை தங்களால் இயன்ற அளவுக்கு வழங்குவார்கள். அவ்வாறு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பொருட்களைக் கொண்டே உணவு தயாரித்து அதனை பொதுமக்களுக்கு வழங்குவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு 150க்கும் மேற்பட்ட ஆடுகளும், 1000க்கும் மேற்பட்ட கோழி மற்றும் சேவல்களும் காணிக்கையாக வழங்கப்பட்டது. இன்று காலை முதல் ஆடுகள், கோழிகள், சேவல்களை உரித்து சுத்தம் செய்யும் பணியில் உள்ளூர் இளைஞர்கள் ஈடுபட்டனர்.

சுத்தம் செய்யப்பட்ட இறைச்சியை பிரம்மாண்ட அண்டாக்களில் சமைத்து செபஸ்தியாருக்கு படையல் போடப்படும். அதன்பிறகு இன்று மதியம் முதல் நள்ளிரவு வரை பக்தர்களுக்கு அசைவ உணவு அன்னதானமாக வழங்கப்படும்.

இன்று காலை முதல் உணவு தயாரிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். வருடம் முழுவதும் நடைபெறும் இந்த வினோத திருவிழாவை காண பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி இன்று நடக்கும் அன்னதான விருந்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து விழாக்குழுவினர் தெரிவிக்கையில், ஜாதி மத பேதமின்றி சமூக ஒற்றுமையை எடுத்துக் காட்டும் வகையில் புனித செபஸ்தியார் கோவில் திருவிழா 350-வது ஆண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருத்தலத்தில் என்ன வேண்டுதல் வைத்தாலும் அதனை செபஸ்தியார் நிறைவேற்றி தருவார் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிய செபஸ்தியாருக்கு பக்தர்கள் வழங்கும் காணிக்கை பொருட்களைக் கொண்டே அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com