search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை கடை நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி: கடையை பூட்டி விட்டு உரிமையாளர் தலைமறைவு
    X

    நகை கடை நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி: கடையை பூட்டி விட்டு உரிமையாளர் தலைமறைவு

    • தீபாவளி சீட்டு மற்றும் தங்க நகை திட்டங்களை அறிவித்து மோசடி செய்து ஏமாற்றிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
    • கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களையும் அவர்களது செல்போன் எண்களை வைத்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி மற்றும் அம்மாபேட்டை சிங்கமெத்தை பகுதியில் வீராணம் அருகே உள்ள வலசையூர் பகுதியை சேர்ந்த ஒருவர் நகை கடை நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் தீபாவளி சீட்டு நடத்தியும், மேலும்தங்க நகை சேமிப்பு திட்டம் மற்றும் தங்க நகை முதலீடு போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களிடம் லட்சகணக்கில் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடை உரிமையாளர் திடீரென தலைமறைவானார். உரிமையாளர் கடையை திறக்க வராததால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சம்பளம் வரும் என எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் ஏமாற்றம் அடைந்ததால் இதுகுறித்து நேற்று மாலை அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

    இதனிடையே சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள கடை பூட்டிய நிலையில் இருப்பதால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் கடை முன்பு இன்று காலை முதலே திரண்டனர். பின்னர் தீபாவளி சீட்டு மற்றும் தங்க நகை திட்டங்களை அறிவித்து மோசடி செய்து ஏமாற்றிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். சிலர் கடை மீது கல்வீசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு வரும் வாடிக்கையாளர்களையும் அவர்கள் சமரசப்படுத்தி வருகிறார்கள்.

    கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களையும் அவர்களது செல்போன் எண்களை வைத்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கடையின் உரிமையாளர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கவர்ச்சி திட்டங்கள் மூலம் பல கோடி வசூல் செய்து பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திலும் முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்து உள்ளதால் போலீசார் சபரிசங்கரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×