search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணத்தகராறில் நண்பரை வெட்டிக்கொன்ற மீன் வியாபாரி- சரண் அடைந்தும் கண்டுகொள்ளாத போலீசார்
    X

    கொலை செய்யப்பட்ட கருப்பசாமி, கைதான ஜெயப்பிரகாஷ்.

    பணத்தகராறில் நண்பரை வெட்டிக்கொன்ற மீன் வியாபாரி- சரண் அடைந்தும் கண்டுகொள்ளாத போலீசார்

    • ஆத்திரம் அடைந்த ஜெயப்பிரகாஷ் தனது நண்பனை கொலை செய்ய முடிவு செய்தார்.
    • இறந்து கிடந்த கருப்பசாமியின் உடலை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (வயது40). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.

    ஜெயப்பிரகாஷ் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது நண்பர் தேவாரம் அருகில் உள்ள கிருஷ்ணம்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (36). இவர் கார்பெண்டர் வேலை பார்த்து வருகிறார். இருவரும் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். கருப்பசாமி நெருங்கிய நண்பராக இருந்ததால் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

    கருப்பசாமிக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் ஜெயப்பிரகாஷ் குடும்பத்துக்கு பண உதவிகள் செய்து வந்துள்ளார். ஆனால் அந்த பணத்தை ஜெயப்பிரகாஷ் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே கொடுத்த பணத்தை வாங்குவதற்காக ஜெயப்பிரகாஷ் வீட்டிற்கு அடிக்கடி வந்து அவரது மனைவியிடம் கருப்பசாமி பணம் கேட்டு வந்துள்ளார். இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து ஜெயப்பிரகாசிடம் கூறவே இனிமேல் தனது வீட்டிற்கு வரவேண்டாம் என கருப்பசாமியிடம் கூறி உள்ளார்.

    அவரும் சம்மதம் தெரிவித்து விட்டு ஜெயப்பிரகாசுக்கு தெரியாமல் அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயப்பிரகாஷ் தனது நண்பனை கொலை செய்ய முடிவு செய்தார்.

    வழக்கம்போல் மது அருந்த வருமாறு கருப்பசாமியை அழைத்துள்ளார். அதன்படி அவர்கள் 2 பேரும் சேர்ந்து பொட்டிப்புரம் செல்லும் சாலையில் ஒண்டிவீரன் கோவில் அருகே மது குடித்தனர். கருப்பசாமிக்கு போதை தலைக்கேறியபோது தான் மறைத்து வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியால் அவரை சரமாரியாக வெட்டி கொன்றார். அதன்பின் ரத்தக்கறையுடன் போடி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு வந்து தான் கொலை செய்துவிட்டதாக கூறினார்.

    ஆனால் அவர் மீன் வியாபாரி என்பதால் அதனால் ரத்தக்கறை ஏற்பட்டிருக்கலாம் என நினைத்தும், போதையில் உளறுவதாக நினைத்தும் போலீசார் நம்ப மறுத்துவிட்டனர்.

    ஆனால் தான் கொலை செய்து விட்டேன் என கூறி அழுதுகொண்டே இருந்ததால் டி.எஸ்.பி. பெரியசாமி தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்றனர். அங்கு இறந்து கிடந்த கருப்பசாமியின் உடலை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கொலை செய்ததை ஒத்துக்கொண்ட பிறகும் போலீசார் அலட்சியத்தால் இரவு முழுக்க போலீஸ் நிலையத்தில் இருந்து பின்னர் போலீசார் ஜெயப்பிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×