search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னூர் அருகே காதல் திருமணம் செய்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை முயற்சி
    X

    அன்னூர் அருகே காதல் திருமணம் செய்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

    • ஒரு மாதமாக அரவிந்தசாமி வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
    • கணவன் மனைவி இருவரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஓரைக்கால்பாளையத்தை சேர்ந்தவர் அரவிந்தசாமி (வயது 28). இவரது மனைவி சந்தியா (25). 2 பேரும் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஓரைக்கால்பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர். ஒரு மாதமாக அரவிந்தசாமி வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று சந்தியா தனது கணவரை மாதம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வரலாம் என அழைத்தார். அதற்கு அரவிந்தசாமி தற்போது கையில் பணம் இல்லை. எனவே பிறகு போகலாம் என கூறினார்.

    அப்போது சந்தியா தனது கணவரிடம் இப்போதே வரவில்லை என்றால் நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என கணவரை மிரட்டினார். உடனடியாக அரவிந்தசாமி நீ மட்டும் தான் விஷம் குடிப்பாயா, நானும் குடிக்கிறேன் என கூறி அங்கு இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். இதனை பார்த்த சந்தியா தனது கணவரிடம் இருந்து விஷத்தை வாங்கி அவரும் குடித்தார்.

    சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கினர். கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அரவிந்தசாமி, சந்தியா ஆகியோரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×