மதுரையில் காதலிக்க மறுத்த பெண்ணை சரமாரியாக தாக்கிய வாலிபர்: நண்பருடன் கைது

காதலிக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இளம்பெண்ணை கைகளால் சரமாரியாக தாக்கினார்.
மதுரையில் காதலிக்க மறுத்த பெண்ணை சரமாரியாக தாக்கிய வாலிபர்: நண்பருடன் கைது
Published on

மதுரை:

மதுரை ஒத்தக்கடை அருகே சந்திரா நகரில் அமைந்துள்ள ஜெராக்ஸ் கடையில் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத் தக்க இளம்பெண் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே அவர் தன்னுடன் பள்ளியில் படித்த சித்திக்ராஜா (20) என்பவருடன் நட்பாக பழகி வந்து உள்ளார்.

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 மாத காலமாக சித்திக் ராஜாவுடன் பேசுவதை இளம்பெண் தவிர்த்து வந்துள்ளார்.

இதையடுத்து சித்திக் ராஜா இளம் பெண்ணை அவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தொடர்ச்சியாக அவதூறாக பேசியதோடு, மனரீதியிலான தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனாலும் இளம்பெண் அதனை கண்டுகொள்ளாமல் வேலைக்கு சென்று வந்தார்.

இந்தநிலையில் கடந்த 17-ந்தேதி காலை வழக்கம் போல் ஜெராக்ஸ் கடைக்கு வேலைக்கு வந்த இளம் பெண் பணியில் இருந்தார். அப்போது அங்கு தனது நண்பருடன் வந்த சித்திக் ராஜா தன்னை காதலிக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனாலும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்த இளம்பெண் உடனடியாக அங்கிருந்து செல்லுமாறு கூறி எச்சரித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சித்திக் ராஜா, இளம்பெண்ணை கைகளால் சரமாரியாக தாக்கினார். இதில் நிலைகுலைந்த அந்த பெண் தனது இருக்கையில் இருந்து பின்புறமாக தரையில் விழுந்தார்.

இருந்தபோதிலும் கொலை வெறியுடன் தாக்கியபோது, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் அங்கிருந்து தப்பிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த இளம் பெண்ணை அருகில் இருந்த வர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஒத்தக்கடை போலீசார் அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை பார்த்து அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து இளம்பெண்ணை சரமாரியாக தாக்கிய ஒத்தக்கடையைச் சேர்ந்த சித்திக் ராஜா மற்றும் அவரது நண்பர் டெம்போ ராஜா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

போலீசாரின் விசாரணை யின்போது தப்பிக்க முயற்சி செய்த சித்திக்ராஜா தவறி விழுந்தபோது அவருக்கு கை எலும்பு முறிந்தது.

பின்னர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவருக்கு மாவுக் கட்டு போடப்பட்டது. தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com