சூலூர், துடியலூரில் கஞ்சா-குட்கா பதுக்கி விற்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 9 பேர் கைது

காய்கறி சந்தையில் மூட்டை தூக்கும் தொழிலாளியாகவும், பகலில் மரவள்ளி சிப்ஸ் விற்கும் தள்ளுவண்டி கடையும் நடத்தி வந்தார். பின்னர் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
சூலூர், துடியலூரில் கஞ்சா-குட்கா பதுக்கி விற்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 9 பேர் கைது
Published on

சூலூர்,

கோவை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி அடுத்த சின்னக்குயில் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்ப டுவதாக கோவை மாவட்ட சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

தகவலின் பேரில் சிறப்பு படையினர் பாப்பம்பட்டி அடுத்த திருமுருகன் நகர் பகுதியில் உள்ள ஒரு குடோனை சோதனை செய்தனர்.

அங்கு மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக அங்கிருந்தவர்களிடம் விசாரிக்க முயன்றனர். ஆனால் அங்கிருந்த 4 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

போலீசார் துரத்தி சென்று அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில், கோவை குரும்பபாளையத்தை சேர்ந்த சிவக்குமார்(39), சவுரிபாளையத்தை சேர்ந்த சுதாகரன் (42), இருகூர் பூங்கா நகரை சேர்ந்த செல்வகுமார்(45), செலக்கரைசலை சேர்ந்த குருநாதன் (49) என்பதும், விற்பனைக்காக அங்கு குட்காவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1.5 டன் எடையுள்ள குட்கா, கார், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

இதில் கைதான செல்வகுமார் இருகூரில் காய்கறி சந்தையில் மூட்டை தூக்கும் தொழிலாளியாகவும், பகலில் மரவள்ளி சிப்ஸ் விற்கும் தள்ளுவண்டி கடையும் நடத்தி வந்தார். இவரை ஆசை வார்த்தை கூறி குட்கா விற்பனையில் ஈடுபடுத்தி உள்ளனர். இவர் கைது செய்யப்பட்டதை அறிந்ததும், அவரது மனைவி தனது மகனுடன் போலீஸ் நிலையத்தில் வந்து அழுதார்.

துடியலூர் போலீசாருக்கு வெள்ளக்கிணறு குளம் அருகே சில கல்லூரி மாணவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பதாக ரகசிய தகவல் வந்தது. போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்ற கல்லூரி மாணவர்கள் கோட்டையாம்பாளை யத்தை சேர்ந்த ரவிந்தரன்(21), கீரநத்தத்தை சேர்ந்த நந்தகுமார் (22), சரவணம்பட்டியை சேர்ந்த சதீஸ்வரன் (19), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த அக்‌ஷய்குமார் (22), கோவில்பாளையத்தை சேர்ந்த தினேஸ்வரன் (19) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

கல்லூரி மாணவர்களுக்கு உத்திரபிரதேசத்தில் இருந்து கஞ்சாவை சப்ளை செய்யும் முகேஷ் பட்டேல் (23) என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com