

ஆறுமுகநேரி:
நெல்லை - திருச்செந்தூர் வரையிலான சுமார் 60 கி.மீ. தூர ரெயில் வழித்தடத்தில் மின்சார ரெயில் திட்டத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்னையை சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் வழிநெடுக மின்கம்பங்கள் நட்டு காப்பர் வயர் பொருத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி காலையில் பார்த்த போது மூலக்கரை ரெயில்வே கேட் அருகில் இருந்து ஆறுமுகநேரி சந்திப்பு ெரயில் நிலையம் வரையிலான ஆயிரத்து 341 மீட்டர் நீள காப்பர் வயர் மாயமாகி இருந்தது தெரியவந்தது. யாரோ மர்ம நபர்கள் இரவோடு இரவாக அதனை திருடி சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் ராஜ்குமார், ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.