search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4 நாட்களாக வெள்ளத்தில் மூழ்கி கிடக்கும் 750 ஏக்கர் வேளாண் பயிர்கள் - விவசாயிகள் கவலை
    X

    4 நாட்களாக வெள்ளத்தில் மூழ்கி கிடக்கும் 750 ஏக்கர் வேளாண் பயிர்கள் - விவசாயிகள் கவலை

    • வெள்ளப்பெருக்கு காரணமாக பிச்சாண்டார் கோவில், உத்தமர்சீலி, திருவளர்ச்சோலை, பெருகமணி, திருப்பராய்த்துறை பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது.
    • லால்குடி பகுதியில் 500 ஏக்கர் ெநற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. தொட்டியம் மற்றும் அந்தநல்லூர் பகுதிகளில் 250 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் வெள்ள நீரில் தத்தளிக்கிறது.

    திருச்சி :

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து உபரி நீர் தொடர்ச்சியாக திறந்து விடப்பட்டது. முக்கொம்பு மேலணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து 17 ஆயிரம் கன அடி நீர் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் திறந்து விடப்பட்டது.

    இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பிச்சாண்டார் கோவில், உத்தமர்சீலி, திருவளர்ச்சோலை, பெருகமணி, திருப்பராய்த்துறை பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. அங்கு வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    மேலும் வேளாண் நிலங்களிலும் வெள்ள நீர் புகுந்தது. லால்குடி பகுதியில் 500 ஏக்கர் ெநற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. கடந்த நான்கு நாட்களாக வெள்ள நீர் வடியாமல் இருப்பதால் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்றைக்குள் வெள்ளநீர் வழியா விட்டால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என வேளாண் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    அது மட்டுமல்லாமல் தொட்டியம் மற்றும் அந்தநல்லூர் பகுதிகளில் 250 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் வெள்ள நீரில் தத்தளிக்கிறது. கூகூர் பகுதியைச் சேர்ந்த கந்தன் என்ற விவசாயி கூறும்போது, எனது இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கிக் கிடக்கிறது. குறுவை தொகுப்பு மூலம் அரசு வழங்கிய உதவிகள் விவசாயம் செய்தேன். ஆனால் தற்போது கஷ்டத்தை சந்திக்க நேரிட்டுள்ளது என கவலை தெரிவித்தார். அரசின் குறுவை தொகுப்பு வீணாகி விட்டதே என்றார்.

    இதற்கிடையே டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை கணக்கிட துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் சேதம் மதிப்பீடுகள் தொடங்கும் என அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதற்கிடையே முக்கொம்பு அணையில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 59 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை 36 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் இன்று 94 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் விளைநிலங்களில் புகுந்த வெள்ள நீர் வடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×