அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 72 ஆயிரம் இடங்கள் நிரம்பின- நாளை மறுநாள் வகுப்பு தொடக்கம்

போட்டித்தேர்வை எதிர்கொள்ள வசதியாக கலை அறிவியல் பாடப்பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்தனர்.மாணவர்களை செல்போன் மூலம் நேரில் அழைத்து இடங்களை ஒதுக்க கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 72 ஆயிரம் இடங்கள் நிரம்பின- நாளை மறுநாள் வகுப்பு தொடக்கம்
Published on

சென்னை:

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்கள் மொத்தம் உள்ளன. இதற்கு 3 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த மாதம் 29-ந்தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடைபெற்றது. 2-வது கட்ட கலந்தாய்வு 12-ந்தேதி தொடங்கி நடந்து வந்த நிலையில் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த வருடமும் பி.காம்., பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்.சி., கணிதம், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகளுக்கு அதிக தேவை ஏற்பட்டது. போட்டித்தேர்வை எதிர்கொள்ள வசதியாக கலை அறிவியல் பாடப்பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்தனர்.

நேற்று வரை 72 ஆயிரம் பேருக்கு பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட்டன. இன்று 3 ஆயிரம் பேருக்கு இடங்கள் ஒதுக்க வாய்ப்பு உள்ளது. 2 கட்ட கலந்தாய்வு மூலம் 75 ஆயிரம் இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 30 ஆயிரம் காலி இடங்களுக்கு உடனே கலந்தாய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒரு சில கல்லூரிகளில் முக்கிய பாடப்பிரிவுகள் நிரம்பினாலும் சில பாடப்பிரிவுகள் காலியாக உள்ளன. மேலும் இடஒதுக்கீடு அடிப்படையில் சில கல்லூரிகளில் பாடப்பிரிவுகள் நிரம்பாமல் காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதனால் 3-வது கட்ட கலந்தாய்வு நாளை (புதன்கிழமை) இடங்கள் காலியாக உள்ள அரசு கல்லூரிகளில் நடக்கிறது. அதிக மதிப்பெண் பெற்று இடங்கள் கிடைக்காத மாணவர்களின் பெயர் விவரங்களை சேகரித்து அவர்களை அழைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மாணவர்களை செல்போன் மூலம் நேரில் அழைத்து இடங்களை ஒதுக்க கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது. இன ஒதுக்கீட்டில் உள்ள காலி இடங்கள் மற்றும் இதர காலி இடங்கள் அனைத்தையும் நிரப்ப அரசு கல்லூரி முதல்வர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து கல்லூரி கல்வி அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படுகிறது. காலியாக உள்ள பாடப்பிரிவுகளுக்கு கட்-ஆப் மார்க் அதிகம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அனைத்து இடங்களை ஒதுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் கேட்டால் 20 சதவீதம் அதிகரித்து கொள்ளவும் வழிவகை செய்யப்படும் என்றனர்.

அனைத்து கலை அறிவியில் கல்லூரிகளிலும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com