27 வினாடிகளில் 52 பரத முத்திரைகள்: உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மாணவி

2 ஆண்டுகளாக பரத நாட்டிய பயிற்சி பெற்றார்.பரத நாட்டியத்திலும் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினார்.
27 வினாடிகளில் 52 பரத முத்திரைகள்: உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மாணவி
Published on

மேலசொக்கநாதபுரம்:

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தை சேர்ந்த சண்முகமணி-நளினி தம்பதியின் மகள் சனா (வயது11). இவர் அமெரிக்காவில் பிறந்துவளர்ந்தவர். இருந்தபோதும் தாய் தந்தையர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதால் தமிழக கலைகள் மீது சிறுமிக்கு மிகுந்த ஆர்வம் இருந்து வந்தது.

இதனால் தமிழகத்தின் பாரம்பரிய கலையான பரத நாட்டியம் கற்க ஆர்வம் கொண்டார். அதன்படி அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் போடியில் கடந்த 2 ஆண்டுகளாக பரத நாட்டிய பயிற்சி பெற்றார்.

பரதநாட்டியம் பயின்று வரும் காலகட்டத்தில் பள்ளி படிப்பு கெடாமல் இருப்பதற்காக இங்குள்ள தனியார் ஆங்கில வழி கல்வியில் 5-ம் வகுப்பு வரை பயின்று வந்தார்.

மேலும் பரத நாட்டியத்திலும் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினார். இதனையடுத்து உலக சாதனைக்காக பரத முத்திரைகள் செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

இவர் 27 வினாடிகளில் 52 பரத முத்திரைகள் செய்து காட்டி விருக்ஷா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

அவருக்கு போடி முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் சான்றுகள் மற்றும் பதக்கங்கள், கேடயங்களை வழங்கி வாழ்த்தினார்.

முற்றிலும் தமிழ் பேசத் தெரியாத நிலையில் தமிழர்களின் பாரம்பரிய நாட்டியக் கலையான பரதநாட்டியம் பயில்வதற்கு அமெரிக்காவில் இருந்து போடி வந்து பரத முத்திரைகளில் உலக சாதனை படைத்து மீண்டும் அமெரிக்கா திரும்ப செல்ல உள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com