கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார்சைக்கிள் ரேசில் ஈடுபட்ட 50 பேர் பிடிபட்டனர்

எச்சரிக்கையை மீறி மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்டு வருகிறார்கள்.போக்குவரத்து போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார்சைக்கிள் ரேசில் ஈடுபட்ட 50 பேர் பிடிபட்டனர்
Published on

திருப்போரூர்:

சென்னையில் மெரினா மற்றும் கிழக்குகடற்கரை சாலைகளில் போலீசாரின் எச்சரிக்கையை மீறி வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் பைக்ரேஸ் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்தநிலையில் பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் விடுமுறை தினமான இன்று அதிகாலை முதல் பைக் ரேஸ் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து பள்ளிக்கரணை போக்குவரத்து உதவி கமிஷனர் ஸ்ரீதர் தலைமையில், இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போக்குவரத்து போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 50-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் ரேசில் ஈடுபட்ட வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.

பாதுகாப்பு உடை அணிந்து இருந்த அவர்களை உதவி கமிஷனர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் கடுமையாக எச்சரித்தனர்.

பின்னர் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி எச்சரித்து அனுப்பினர். இதனால் கோவளம் அடுத்த குன்னுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com