2 சிறுவர்கள் உள்பட 5 பேர் சிறையில் அடைப்பு

ஆட்கள் நடமாட்டம் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த 5 பேரும் பிரகாசை தாக்கி உள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து ஒரு பையை வழிப்பறி செய்துவிட்டு 5 பேரும் தப்பி சென்றார்கள். இந்த கும்பல் இதே போன்று வேறு யாரிடமும் கைவரிசை காட்டியுள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
2 சிறுவர்கள் உள்பட 5 பேர் சிறையில் அடைப்பு
Published on

ஈரோடு, ஆக. 21-

ஈரோடு பெரியார்நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 42). இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் விடுமுறையின்போது ஈரோட்டுக்கு வந்து செல்வது வழக்கம். சுதந்திர தினத்தையொட்டி விடுமுறை விடப்பட்டதால் கடந்த 12-ந் தேதி இரவு பிரகாஷ் சென்னை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி ஈரோட்டுக்கு வந்தார்.

அவர் நள்ளிரவில் ஈரோட்டுக்கு வந்ததால், அங்கிருந்து தனது வீட்டுக்கு நடந்து சென்றார். அவர் பெரியார்நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் 5 பேர் நின்றிருந்தனர்.

ஆட்கள் நடமாட்டம் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த 5 பேரும் பிரகாசை தாக்கி உள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து ஒரு பையை வழிப்பறி செய்துவிட்டு 5 பேரும் தப்பி சென்றார்கள்.

அந்த பையில் லேப்டாப், செல்போன், ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பிரகாஷ் வைத்து இருந்தார்.

இதுகுறித்து பிரகாஷ் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார், ஏட்டுகள் தனசேகர், கோபி, போலீஸ்காரர்கள் அருண்குமார், வேலுமணி, திருமூர்த்தி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டன.அவர்கள் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணையை தீவிர படுத்தினார்.

போலீசார் விசாரணையில், பிரகாஷிடம் இருந்து பையை திருடி சென்றது ஈரோடு நேதாஜிரோடு ஆலமரத்து தெருவை சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் மனோ (வயது 21), ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் ஆகாஸ் (20), ஈரோடு தீரன்சின்னமலை வீதியை சேர்ந்த பழனிசாமியின் மகன் பிரகாஷ் (19) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. இந்த கும்பல் இதே போன்று வேறு யாரிடமும் கைவரிசை காட்டியுள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 2 சிறுவர்கள் கோவையில் உள்ள சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com